பழைய இரும்புக்கடையில் டெங்கு கொசுப்புழு உற்பத்தி: உரிமையாளருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்


பழைய இரும்புக்கடையில் டெங்கு கொசுப்புழு உற்பத்தி: உரிமையாளருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்
x
தினத்தந்தி 31 Aug 2019 11:00 PM GMT (Updated: 31 Aug 2019 8:44 PM GMT)

பழைய இரும்புக்கடையில் டெங்கு கொசுப்புழுக்கள் உற்பத்தியாகி இருந்ததால், உரிமையாளருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.

நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தில் விட்டு, விட்டு மழை பெய்து வருகிறது. இந்த மழையினால் மழை நீர் தேங்கி நிற்கும் இடங்களில் டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏடிஸ் கொசுப்புழு உற்பத்தியாகும் என்பதால் நாகர்கோவில் மாநகராட்சி அதிகாரிகள் டெங்கு கொசு ஒழிப்பு நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

அதன் ஒரு கட்டமாக நேற்று நாகர்கோவில் மாநகரப் பகுதிகளில் உள்ள ஒர்க்‌ஷாப்புகள், பஞ்சர் ஒட்டும் கடைகள் ஆகியவற்றில் சேகரித்து வைக்கப்பட்டு இருக்கும் டயர்களில் மழைநீர் தேங்கி கொசுப்புழு உற்பத்தி ஆகியிருக்கிறதா? என்பதை ஆய்வு செய்யும் வகையில் திடீர் சோதனை நடந்தது.

டயர்கள் பறிமுதல்

மாநகராட்சி ஆணையர் சரவணக்குமார் உத்தரவின்பேரில், மாநகர நல அதிகாரி கின்சால் தலைமையில், சுகாதார ஆய்வாளர்கள் பகவதிப்பெருமாள், மாதேவன்பிள்ளை, ராஜா, சத்தியராஜ், ஜாண் ஆகியோர் முன்னிலையில் 25-க்கும் மேற்பட்ட மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் இந்த திடீர் சோதனையில் பங்கேற்றனர்.

நாகர்கோவில் நாகராஜா கோவில் திடல் பகுதியில் உள்ள பஞ்சர் ஒட்டும் கடைகள் மற்றும் ஒர்க்‌ஷாப்புகளில் இருந்து தொடங்கிய இந்த சோதனை, டிஸ்ட்டில்லரி ரோடு, கிருஷ்ணன்கோவில், வெட்டூர்ணிமடம், பார்வதிபுரம், கே.பி.ரோடு, பொதுப்பணித்துறை அலுவலக சாலை, கேப்ரோடு, செட்டிகுளம், ராஜாக்கமங்கலம் ரோடு ஆகிய பகுதிகளில் இந்த சோதனை நடந்தது.அப்போது ஒர்க்‌ஷாப்புகள் மற்றும் பஞ்சர் ஒட்டும் கடைகளில் ஏடிஸ் கொசுப்புழுக்கள் உற்பத்தி ஆகும் வகையில் சேகரித்து வைக்கப்பட்டு இருந்த லாரி, கார், ஆட்டோ, இருசக்கர வாகனங்கள் போன்றவற்றின் டயர்கள் சுமார் 150-க்கும் மேற்பட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.

பழைய இரும்புக்கடை

மேலும் ராஜாக்கமங்கலம் சாலையில் உள்ள ஒரு பழைய இரும்புக்கடையில் நடத்திய சோதனையில் அங்கு சேகரித்து வைக்கப்பட்டு இருந்த பழைய இரும்பு பொருட்களில் தேங்கியிருந்த மழை நீரில் ஏடிஸ் கொசுப்புழுக்கள் உற்பத்தி ஆகியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

ஏற்கனவே இந்தக்கடையின் உரிமையாளரை எச்சரிக்கை செய்தும், ஏடிஸ் கொசுப்புழு உற்பத்தியாகும் வகையில் பழைய இரும்பு பொருட்களை சேகரித்து வைத்திருந்ததால் அவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் அவருடைய பழைய இரும்புக்கடையை சுத்தம் செய்தபிறகுதான் கடையை திறக்க வேண்டும் என்று நோட்டீசும் வழங்கப்பட்டுள்ளது.

பிளாஸ்டிக் பைகள்

இதேபோல் டென்னிசன் ரோட்டில் உள்ள ஒரு அச்சகத்தில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சோதனை நடத்தினர். அப்போது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் அங்கு அச்சடிக்கப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து அங்கிருந்த பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்ததோடு அச்சக உரிமையாளருக்கு ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.

Next Story