கடலூர் பாடலீஸ்வரர் கோவிலில் முஸ்லிம் ஜோடிக்கு திருமணம் செய்ய அனுமதி மறுப்பு


கடலூர் பாடலீஸ்வரர் கோவிலில் முஸ்லிம் ஜோடிக்கு திருமணம் செய்ய அனுமதி மறுப்பு
x
தினத்தந்தி 16 Sep 2019 11:00 PM GMT (Updated: 16 Sep 2019 8:29 PM GMT)

கடலூர் பாடலீஸ்வரர் கோவிலில் முஸ்லிம் ஜோடிக்கு திருமணம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் மற்ற ஜோடிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கடலூர்,

கடலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் புதுவாழ்வு நலச்சங்கம் மற்றும் இந்திய தொழுநோய் சேவை அறக்கட்டளை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான சுயம்வரம் நிகழ்ச்சி கடந்த மாதம் 18-ந்தேதி கடலூரில் நடைபெற்றது. இதேபோல் ஈரோடு, திண்டுக்கல்லிலும் சுயம்வரம் நிகழ்ச்சி நடந்தது.

இதில் வேலூர் மாவட்டம் அரக்கோணம் நாகவேடு கிராமத்தை சேர்ந்த முஸ்லிம் மதத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி ரஷீத், ஆற்காடை சேர்ந்த அப்தாபேகம் ஜோடி உள்பட 15 ஜோடிகள் தேர்வு செய்யப்பட்டன. இந்த 15 ஜோடிகளுக்கு கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவிலில் நேற்று திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

அதன்படி இந்த விழாவில் கலந்துகொள்வதற்காக 15 மாற்றுத்திறனாளி ஜோடிகளும் நேற்று அதிகாலை பாடலீஸ்வரர் கோவிலுக்கு உறவினர்கள், நண்பர்களுடன், வேன்களில் வந்தனர். பின்னர் மணமக்கள் மணக்கோலத்தில் பெரியநாயகி அம்மன் சன்னதி முன்புள்ள கொலு மண்டபத்துக்கு சென்றனர். அங்கு திருமண ஏற்பாடுகள் மும்முரமாக நடந்தது.

அனுமதி மறுப்பு

அப்போது முஸ்லிம் ஜோடிக்கு கோவிலின் உள்ளே வைத்து திருமணம் செய்வதற்கு கோவில் நிர்வாகம் திடீரென அனுமதி மறுத்தது. மேலும் முஸ்லிம் மதத்தை சேர்ந்த ஜோடிக்கு மட்டும் கோவிலுக்கு வெளியே உள்ள சங்கு மண்டபத்திலும், மற்ற 14 ஜோடிகளுக்கு கொலுமண்டபத்திலும் திருமணத்தை நடத்தலாம் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்தது. இதற்கு மாற்றுத்திறனாளி சங்க நிர்வாகிகளும், இதர மாற்றுத்திறனாளி ஜோடிகளும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் எந்தவித பாகுபாடும் இன்றி அனைத்து ஜோடிகளுக்கும் கோவிலுக்கு வெளியே உள்ள சங்கு மண்டபத்திலேயே வைத்து திருமணத்தை நடத்த முடிவு செய்யப்பட்டது. இதற்கு அனைவரும் ஆதரவு தெரிவித்தனர். இதையடுத்து மணமேடை சங்கு மண்டபத்துக்கு மாற்றப்பட்டது. கொலுமண்டபத்தில் இருந்த மாற்றுத்திறனாளி ஜோடிகளும், அவர்களின் உறவினர்கள், நண்பர்களும் சங்கு மண்டபத்துக்கு வந்தனர்.

திருமணம்

அங்கு மங்கள வாத்திய இசை முழங்க, சிவாச்சாரியார்கள் மந்திரம் ஓத 15 ஜோடிகளுக்கு திருமணம் நடந்தது. விழாவில் கடலூர் மாவட்ட கலெக்டர் அன்புசெல்வன், மாற்றுத்திறனாளிகள் புதுவாழ்வு நலச்சங்க மாவட்ட தலைவர் சண்முகம், துணை தலைவர் பாலமுருகன், துணை செயலாளர் ராஜ்குமார், மகளிர் அணி செயலாளர் மீரா, நகரசபை முன்னாள் தலைவர் குமரன், முன்னாள் துணை தலைவர் சேவல்குமார் மற்றும் உறவினர்கள் அட்சதை தூவி மணமக்களை வாழ்த்தினார்கள்.

ஒவ்வொரு ஜோடிக்கும் அமைச்சர் எம்.சி.சம்பத்தின் சொந்த செலவில் 4 கிராம் தங்கம், பல்வேறு அமைப்பினர் சார்பில் ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள சமையல் பாத்திரங்கள், 2 மாதத்துக்கு தேவையான அரிசி, மளிகை பொருட்கள் ஆகியவை வழங்கப்பட்டன.

Next Story