மக்களை திசை திருப்பவே பா.ஜ.க. அரசு, மொழி பிரச்சினையை கையில் எடுத்துள்ளது முத்தரசன் பேட்டி


மக்களை திசை திருப்பவே பா.ஜ.க. அரசு, மொழி பிரச்சினையை கையில் எடுத்துள்ளது முத்தரசன் பேட்டி
x
தினத்தந்தி 17 Sep 2019 11:15 PM GMT (Updated: 17 Sep 2019 6:43 PM GMT)

மக்களை பல்வேறு பிரச்சினைகளில் இருந்து திசை திருப்பவே பா.ஜ.க. அரசு மொழி பிரச்சினையை கையில் எடுத்துள்ளது என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறினார்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை திலகர் திடல் அருகே உள்ள இந்திய கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்திற்கு, அக்கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் நேற்று வந்தார். பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு, அவரது உருவப்படத்திற்கு முத்தரசன் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-

காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரி பரூக் அப்துல்லா கைது விவகாரத்தில், உள்துறை மந்திரி அமித்ஷா அரசியல் சட்டத்தை மீறிவிட்டார். எனவே அவரை உடனடியாக மந்திரி பதவியில் இருந்து ஜனாதிபதி நீக்க வேண்டும். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான நீதிபதிகள், ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சென்று அங்குள்ள உண்மை நிலைகளை ஆராய்ந்து ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டும்.

பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்

மக்களை பல்வேறு பிரச்சினைகளில் இருந்து திசை திருப்பவே பா.ஜ.க. அரசு மொழி பிரச்சினையை கையில் எடுத்துள்ளது. இந்தி மொழி குறித்த மத்திய மந்திரி அமித்ஷாவின் கருத்து மக்களை பிளவுபடுத்தும் நாசக்கார வேலையாகும். உடனடியாக அவர் தனது கருத்தை திரும்பப் பெற்று பொதுமக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். ஜெயலலிதா இருந்திருந்தால் இந்தி குறித்த கருத்துக்கு பகிரங்கமாக எதிர்ப்பு தெரிவித்து இருப்பார். ஆனால் தற்போது பா.ஜ.க.வின் பினாமி கட்சியாக அ.தி.மு.க. உள்ளது. அதனால் தான் அமித்ஷாவின் கருத்தை ஆதரித்து அமைச்சர்கள் பல்வேறு கருத்துக்களை கூறி வருகின்றனர்.

தமிழக முதல்-அமைச்சரின் வெளிநாட்டு பயணம், மக்கள் பணத்தை விரயமாக்கும் செயல். இதுவரை பெற்ற முதலீடுகள் குறித்து முதல்-அமைச்சர் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன், அதை எதிர்கொள்வது பற்றி மத சார்பற்ற கூட்டணி கட்சிகள் ஒன்று கூடி முடிவு செய்வோம். இதேபோல் நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதி களுக்கான இடைத்தேர்தலில் கூட்டணி கட்சிகள் முடிவு செய்து போட்டியிடும். சந்திரயான்-2 தோல்வி அடையவில்லை. தொடர்ந்து விஞ்ஞானிகள் முயற்சி செய்து வருகின்றனர். அதில் வெற்றி பெறுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதைத்தொடர்ந்து அவர், புதுக்கோட்டை புதிய பஸ் நிலையம் பகுதியில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கினார்.

Next Story