அமித்‌ஷா, ராஜேந்திரபாலாஜியை கண்டித்து திருச்சியில் காங்கிரசார் திடீர் மறியல்; போலீசாருடன் கடும் வாக்குவாதம்


அமித்‌ஷா, ராஜேந்திரபாலாஜியை கண்டித்து திருச்சியில் காங்கிரசார் திடீர் மறியல்; போலீசாருடன் கடும் வாக்குவாதம்
x
தினத்தந்தி 18 Sep 2019 11:00 PM GMT (Updated: 18 Sep 2019 5:47 PM GMT)

அமித்‌ஷா, ராஜேந்திரபாலாஜியை கண்டித்து திருச்சியில் காங்கிரசார் திடீர் மறியலில் ஈடுபட்டனர். அப்போது போலீசாருடன் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. 21 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

மலைக்கோட்டை,

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் இடைக்கால தலைவரான சோனியா காந்தி மற்றும் ராகுல்காந்தி குறித்து தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி அவதூறாக பேசியதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையிலும், இந்திமொழியை தமிழகத்தில் திணிக்கும் வகையில் கருத்து தெரிவித்த மத்திய மந்திரி அமித்‌ஷாவை கண்டித்தும் திருச்சியில் காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகமான அருணாசலம் மன்றம் முன் நேற்று காலை 11 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜவகர் தலைமை தாங்கினார். தெற்கு மாவட்ட தலைவர் கோவிந்தராஜ், மாநில இளைஞர் அணி துணைத்தலைவர் விச்சு, சிறுபான்மைபிரிவு மாநில துணைத்தலைவர் மன்சூர்அலி, மாவட்ட செயலாளர்கள் ராஜாடேனியல் ராஜ், சிவா, மனித உரிமைத்துறை நிர்வாகி ஜி.மகேந்திரன், முன்னாள் மாவட்ட தலைவர் ஆர்.சி.பாபு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

திடீர் மறியல்

இந்த நிலையில் திடீரென்று காங்கிரஸ் பெண் பிரமுகர் ஒருவர் செருப்பை தூக்கி காண்பித்தார். மறியலில் ஈடுபட்ட காங்கிரசார், அமைச்சர் ராஜேந்திரபாலாஜி திருச்சி வரும்போது கருப்புக்கொடி காட்டுவோம் என்று ஆவேசமாக பேசியபடி, சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீஸ் உதவி கமி‌‌ஷனர் சுஜித், கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகவேல் ஆகியோர், மறியலில் ஈடுபடுவது சட்டவிரோதம் என்றும், கலைந்து செல்லுங்கள். இல்லையேல் கைது செய்யப்படுவீர்கள் என்று எச்சரித்தனர். இதனால், காங்கிரசாருக்கும், போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

அதற்கு காங்கிரசார், கைது நடவடிக்கைக்கு நாங்கள் பயந்தவர்கள் அல்ல. முடிந்தால் கைது செய்யுங்கள் என கோ‌‌ஷமிட்டனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் உடனடியாக மாநகர் மாவட்ட தலைவர் ஜவகர் உள்ளிட்ட 21 பேரை போலீசார் கைது செய்து காவல்துறை வாகனத்தில் ஏற்றி ஒரு தனியார் மண்டபத்துக்கு கொண்டு சென்றனர். இந்த மறியல் போராட்டத்தின்போது தெற்கு மாவட்ட தலைவர் கோவிந்தராஜ் உள்ளிட்ட சிலர் அதில் பங்கேற்காமல், அருணாசலம் மன்ற வளாகத்திலேயே நின்று கொண்டிருந்தனர். இதனால், அவர் உள்ளிட்ட சிலர் கைதாகாமலேயே வீடுகளுக்கு திரும்பினர். இது போராட்டத்தின்போது கோ‌‌ஷ்டிபூசல் இருப்பதை வெட்டவெளிச்சமாக்கி விட்டதாகவே காங்கிரசார் சிலர் தெரிவித்தனர்.

Next Story