திருச்சி உறையூரில் அரிவாளால் வெட்டப்பட்ட வாலிபர் சாவு கொலை வழக்காக மாற்றம்; ஒருவர் கைது


திருச்சி உறையூரில் அரிவாளால் வெட்டப்பட்ட வாலிபர் சாவு கொலை வழக்காக மாற்றம்; ஒருவர் கைது
x
தினத்தந்தி 23 Sep 2019 11:00 PM GMT (Updated: 23 Sep 2019 6:36 PM GMT)

திருச்சி உறையூரில் அரிவாளால் வெட்டப்பட்ட வாலிபர் இறந்தார். இதையடுத்து அந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

திருச்சி,

திருச்சி உறையூர் மேலமின்னப்பன் தெருவை சேர்ந்த செல்வராஜின் மகன் மணிகண்டன் (வயது 22). இவர் உடற்பயிற்சி கூடத்தில் உபகரணங்கள் பழுதுபார்ப்பு பணியில் ஈடுபட்டு வந்தார். மேலும் உடற்பயிற்சி கூடம் அமைத்து கொடுப்பதையும், உடற்பயிற்சி மேற்கொள்வதையும் வழக்கமாக கொண்டிருந்தார். இதனால் அவரை ‘ஜிம்’ மணிகண்டன் என அப்பகுதியினர் அழைப்பது உண்டு.

இந்தநிலையில் நேற்று முன்தினம் மதியம் மணிகண்டன் வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தபோது அதே பகுதியை சேர்ந்த செந்தில்குமார், அவரது உறவினர் புகழேந்தி ஆகிய 2 பேரும் வந்து, முன்விரோதம் காரணமாக மணிகண்டனிடம் தகராறில் ஈடுபட்டனர். அப்போது செந்தில்குமாரை மணிகண்டன் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த செந்தில்குமார், புகழேந்தி ஆகியோர் அரிவாளால் மணிகண்டனை வெட்டிவிட்டு தப்பிச்சென்றனர். இதில் படுகாயமடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்தார். மணிகண்டனை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

ஒருவர் கைது

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் உறையூர் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலன் இன்றி மணிகண்டன் நேற்று அதிகாலை 2 மணி அளவில் இறந்தார். இதையடுத்து இந்த வழக்கை போலீசார் கொலை வழக்காக மாற்றம் செய்தனர். மேலும் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட செந்தில்குமாரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில், தெருவில் யார் பெரியவர்? என்பதில் ஏற்பட்ட தகராறில் மணிகண்டன் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. மேலும் அதே பகுதியை சேர்ந்த சடை மணி என்பவருடன் செந்தில்குமாருக்கு தகராறு இருந்து வந்ததும், சடைமணிக்கு ஆதரவாக மணிகண்டன் செயல்பட்டு வந்ததால் ஆத்திரத்தில் அவரை கொலை செய்ததும் தெரிந்தது. மேலும் தப்பியோடிய புகழேந்தியை போலீசார் தேடி வருகின்றனர். புகழேந்தி, கைதான செந்தில்குமாரின் உறவினர் ஆவார். அவர் சரக்கு வேனில் டிரைவராக பணியாற்றி வருகிறார். கைதான செந்தில்குமார் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

அமைச்சர் வீட்டின் அருகே...

கொலையான மணிகண்டனின் உடல் நேற்று அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பிரேத பரிசோதனைக்கு பின் அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மணிகண்டனின் உடலை பார்த்து அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். மணிகண்டனின் நண்பர்கள் சோகத்துடன் அரசு மருத்துவமனை வளாகத்தில் திரண்டு இருந்தனர். மணிகண்டன் வெட்டப்பட்ட சம்பவ இடத்தின் அருகே அமைச்சர் வளர்மதியின் வீடு உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த கொலை சம்பவத்தால் திருச்சி உறையூர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story