முட்டப்பதி வைகுண்டசாமிக்கு ரூ.1 கோடியில் புதிய தேர் தயார் செய்யும் பணி தீவிரம்


முட்டப்பதி வைகுண்டசாமிக்கு ரூ.1 கோடியில் புதிய தேர் தயார் செய்யும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 23 Sep 2019 10:45 PM GMT (Updated: 23 Sep 2019 8:12 PM GMT)

முட்டப்பதி அய்யா வைகுண்டசாமி பதியில் ரூ.1 கோடி செலவில் புதிய தேர் செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

கன்னியாகுமரி,

கன்னியாகுமரி அருகே முட்டப்பதியில் அய்யா வைகுண்டசாமி பதி உள்ளது. இந்த பதி அய்யா வைகுண்டசாமியின் பஞ்சப்பதிகளுள் ஒன்றாகும். அய்யா வைகுண்டர் தவம் இருந்து விஞ்ஞை பெற்ற மூலப்பதியாக இந்த முட்டப்பதி திகழ்கிறது. இந்த முட்டப்பதியில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் 11 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

இந்த பதியில் பங்குனி திருவிழாவின் போது வைகுண்டசாமி தேரில் பவனி வருவதற்கு தேர் இல்லாமல் இருப்பது பெரும் குறையாக இருந்தது. இதனையடுத்து புதிய தேர் செய்ய முடிவு செய்யப்பட்டது.

ரூ.1 கோடியில்...

தேக்குமரம் மூலம் ரூ.1 கோடி செலவில் தேர் செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்த தேர் 27 அடி உயரத்திலும் 19 அடிநீளம் மற்றும் 10 அடி அகலத்திலும் செய்யப்பட்டு வருகிறது. இந்த தேரின் மொத்த எடை 20 டன் ஆகும். கிருஷ்ணன்கோவிலை சேர்ந்த மரச்சிற்பி சக்திபிரகாஷ் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட சிற்பிகள் தேரை செய்து வருகிறார்கள்.

வருகிற மார்ச் மாதத்திற்குள் தேர் செய்யும் பணி முடிக்கப்பட்டு பங்குனி திருவிழாவின் 11-ம் நாள் திருவிழா அன்று கோவிலை சுற்றி பவனி வர உள்ளது. இந்த தேர் ஓடுவதற்காக முட்டப்பதியை சுற்றி தேரோடும் பாதையும் அமைக்கப்படுகிறது. இந்த தகவலை முட்டப்பதி தர்ம கர்த்தாவும் தேர் திருப்பணிக் குழு பொறுப்பாளருமான மனோகர செல்வன் தெரிவித்தார்.

Next Story