அரியலூர் மாவட்டத்தில் நெல் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும் விவசாயிகள் வலியுறுத்தல்


அரியலூர் மாவட்டத்தில் நெல் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும் விவசாயிகள் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 26 Sep 2019 11:00 PM GMT (Updated: 26 Sep 2019 7:58 PM GMT)

அரியலூர் மாவட்டத்தில் நெல் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும் என்று குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.

அரியலூர்,

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் டி.ஜி.வினய் தலைமை தாங்கினார். கூட்டத்தில் காவிரி டெல்டா பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு மாவட்ட தலைவர் தூத்தூர் தங்க.தர்மராஜன் கூறுகையில், திருமானூர், த.பழூர் ஆகிய டெல்டா பகுதிகளில் அனைத்து வரத்து பாசன வடிகால் வாய்க்கால்களை தூர்வாரிய தமிழக அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் மேட்டூர் அணையில் திறந்து விடப்படும் தண்ணீரானது கொள்ளிடம் ஆற்றில் திறந்து விடப்பட்டு வீணாக கடலில் கலப்பதை தடுக்கும் வகையில் அரியலூர் மாவட்டம் தூத்தூர் மற்றும் தஞ்சாவூர் மாவட்டம், வாழ்க்கை இடையில் கொள்ளிடம் ஆற்றில் கதவணை திட்டத்தை அறிவித்த அரசு விரைவில் அவற்றை செயல்படுத்த வேண்டும். மேலும் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே திருமழப்பாடி உள்ளிட்ட 5 இடங்களில் தடுப்பணை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்

ஊராட்சி பகுதி ஏரிகளை தூர்வாரும் பணி நடக்கிறது. அவ்வாறு தூர் வாரும் மண்ணை வெளி நபர்களுக்கு விற்பனை செய்யாமல் அந்தந்த ஏரிக்கரையில் கொட்டி கரையை உயர்த்தி பலப் படுத்தி மரக்கன்றுகள் நட வேண்டும். குருவாடி ஊராட்சியில் துணை மின் நிலையம் அமைக்க வேண்டும் என்றார். விவசாயி செங்கமுத்து கூறுகையில், மாவட்டத்தில் பயிரிடப்பட்டுள்ள மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்குதல் அதிகமாக உள்ளது. எனவே வேளாண் அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு உரிய மருந்துகள் மற்றும் ஆலோசனைகளை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். சுக்கிரன் ஏரியிலுள்ள ஆக்கிரமிப்பை முழுமையாக அகற்ற வேண்டும் என்றார்.

விவசாயி அய்யப்பன் கூறுகையில், உடையார்பாளையம் அருகே அணிகுதிச்சான் கிராமத்தில் உள்ள நாகல்குட்டை ஏரியை சிலர் ஆக்கிரமித்துள்ளனர். இந்த ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வாரி தண்ணீர் சேகரிக்க அரசும், மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது சம்பந்தமாக பல முறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றார்.

கையிருப்பில்...

தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் விஸ்வநாதன் கூறுகையில், விவசாயிகளுக்கு வழங்கிய நகைகடனுக்கான வட்டியை மத்திய அரசாங்கம் குறைக்க நடவடிக்கை எடுக்க உள்ளது. இதனால் நகையைவங்கிகளில் அடகு வைத்து விவசாயம் செய்யும் சிறு, குறு விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். இதுகுறித்து மாநில அரசின் மூலம் நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டர் முயற்சி செய்து விவசாயிகளையும், விவசாயத்தையும் பாதுகாக்க வேண்டும் என்றார்.

விவசாயி ராஜேந்திரன் கூறுகையில், கரும்பு விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலை நிர்வாகங்கள் வழங்க வேண்டிய நிலுவைத்தொகையை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் ஒவ்வொரு வங்கியும் வெவ்வேறு விதமான கடன் தொகையை வழங்க முன்வருகின்றன. இதனை போக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகளுக்கு தேவையான உரங்களை போதுமான அளவு கையிருப்பில் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். மேலும் அரியலூர் மாவட்டத்தில் நெல் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தினர்.

தொடர்ந்து விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு கலெக்டர் பதிலளித்து பேசினார். இந்த கூட்டத்தில் வேளாண் இணை இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி, துணை இயக்குனர் பழனிசாமி உள்பட அனைத்துத்துறை அலுவலர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர். 

Next Story