திருச்சி வழியாக இயக்கப்படும் தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் விரைவில் தனியார் மயம்


திருச்சி வழியாக இயக்கப்படும் தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் விரைவில் தனியார் மயம்
x
தினத்தந்தி 6 Oct 2019 11:15 PM GMT (Updated: 6 Oct 2019 3:30 PM GMT)

திருச்சி வழியாக இயக்கப்படும் தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் விரைவில் தனியார் மயமாக மாற உள்ளதாக ரெயில்வே வட்டாரத்தினர் தெரிவித்தனர்.

திருச்சி,

டெல்லி-லக்னோ இடையே இயக்கப்படும் தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயிலை ரெயில்வே நிர்வாகம் அதன் துணை அமைப்பான ஐ.ஆர்.சி.டி.சி.யிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதுபோல் நாட்டின் முக்கியமான வழித்தடங்களில் இயக்கப்படும் சில எக்ஸ்பிரஸ் ரெயில்களை தனியாருக்கு விட ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி, தெற்கு ரெயில்வேயில் திருச்சி வழியாக இயக்கப்படும் சென்னை-மதுரை தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையும் விரைவில் தனியார் மயமாக மாற உள்ளதாக ரெயில்வே வட்டாரத்தினர் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக ரெயில்வே தொழிற்சங்கத்தினர் கூறியதாவது:-


ரெயில்வே நிர்வாகம் நாட்டில் 50 வழித்தடங்களில் 150 ரெயில்களை தனியாருக்கு வழங்க உள்ளது. தனியார் நிறுவனத்தினர் ஏ.சி. வசதிகளை கொண்ட ரெயில்களை இயக்குவதில் அதிகம் ஆர்வமாக உள்ளனர்.

தெற்கு ரெயில்வேயில் சென்னை-மதுரை இடையே இயக்கப்படும் தேஜஸ் எக்ஸ்பிரஸ் முதல் ரெயிலாக தனியாரிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. இதற்கான ஒப்பந்தப்புள்ளி விரைவில் கோரப்பட உள்ளது.

தனியார் மயமான பின் டிக்கெட் கட்டணம் தற்போது உள்ளதை விட உயரும். விமான டிக்கெட் கட்டணம் போல மாறவாய்ப்பு உள்ளது. சென்னை-கோவை வழித்தடத்தில் இயக்கப்படும் சேரன் எக்ஸ்பிரஸ் ரெயிலை தேஜஸ் ரெயிலாக மாற்றி தனியார் மயமாக வாய்ப்பு உள்ளது.

ஒப்பந்தப் புள்ளியில் தனியார் நிறுவனத்திற்கு சில விதிமுறைகளை ரெயில்வே நிர்வாகம் விதிக்கும். பல முன்னணி நிறுவனங்கள் போட்டி போட்டு ஒப்பந்தப் புள்ளியை எடுக்க வாய்ப்பு உள்ளது. தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்க கட்டணம் வசூலிக்கப்படுவது போல தனியார் ரெயில்கள், வழித்தடத்தில் ஒரு முறை சென்று வர சுங்க கட்டணம் வசூலிக்க திட்டம் தீட்டியுள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

சென்னை-மதுரை இடையே தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் வாரத்தில் வியாழக்கிழமை தவிர மற்ற நாட்களில் பகல் நேரத்தில் இயக்கப்பட்டு வருகிறது. திருச்சி, கொடைரோடு ரெயில் நிலையங்களில் மட்டும் நின்று செல்லும் இந்த ரெயில் பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story