தேன்கனிக்கோட்டை அருகே ஊருக்குள் புகுந்த காட்டு யானை பொதுமக்கள் அச்சம்


தேன்கனிக்கோட்டை அருகே ஊருக்குள் புகுந்த காட்டு யானை பொதுமக்கள் அச்சம்
x
தினத்தந்தி 6 Oct 2019 11:00 PM GMT (Updated: 6 Oct 2019 9:08 PM GMT)

தேன்கனிக்கோட்டை அருகே ஊருக்குள் புகுந்த காட்டு யானையால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

தேன்கனிக்கோட்டை,

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ளது குந்துக்கோட்டை காப்புக்காடு. இந்த காப்புக்காட்டில் 10-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் உள்ளன. இந்த வனப்பகுதியில் இருக்கும் நீர்நிலைகளில் தற்போது தண்ணீர் குறைந்த அளவிலேயே உள்ளது. இதன் காரணமாக வனவிலங்குகள் அருகில் உள்ள கிராமங்களுக்குள் புகுந்து ஏரிகளில் தண்ணீர் குடித்து வருகின்றன.

இந்தநிலையில் குந்துக்கோட்டை காப்புக்காட்டில் இருந்து காட்டு யானை ஒன்று தண்ணீர் தேடி வெளியே வந்தது. அந்த யானை வனப்பகுதியையொட்டி உள்ள ஏணிபண்டா கிராமத்திற்குள் புகுந்தது.

பொதுமக்கள் அச்சம்

பின்னர் இந்த யானை அந்த கிராமத்தில் உள்ள குட்டைக்கு சென்று தண்ணீர் குடித்தது. மேலும், துதிக்கையால் தண்ணீரை உறிஞ்சி பீய்ச்சியடித்து விளையாடியது. பின்னர் நீண்டநேரம் காட்டு யானை அப்பகுதியில் சுற்றி திரிந்தது. இதைப் பார்த்து அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

மேலும் அவர்கள் இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதற்கிடையே யானை மீண்டும் வனப்பகுதிக்குள் சென்று விட்டது. காட்டு யானை ஊருக்குள் புகுந்த சம்பவத்தால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். காட்டு யானை நடமாட்டம் காரணமாக பொதுமக்கள் யாரும் வனப் பகுதியை ஒட்டி செல்ல வேண்டாம் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story