அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கூடுதல் டாக்டர்கள் நியமிக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்


அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கூடுதல் டாக்டர்கள் நியமிக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 8 Oct 2019 11:00 PM GMT (Updated: 8 Oct 2019 2:59 PM GMT)

காரை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கூடுதல் டாக்டர்களை நியமிக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பாடாலூர்,

பெரம்பலூர் மாவட்டம், பாடாலூர் அருகே காரை கிராமம் மேல தெருவை சேர்ந்தவர் நாகராஜ் மகன் வீரமணி(வயது 33). கூலி தொழிலாளியான இவருக்கு இன்னும் திருமணம் நடைபெற வில்லை. இந்த நிலையில் இவர் நேற்று காலை குடும்ப பிரச்சினை காரணமாக அரளி விதையை (வி‌‌ஷம்) அரைத்து குடித்துவிட்டார். இதில் மயங்கிய நிலையில் கிடந்த வீரமணியை அவரது உறவினர்கள், அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக காரை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அப்போது டாக்டர்கள் அங்கு பணியில் இல்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து மருத்துவமனையில் இருந்த செவிலியர்கள் வீரமணிக்கு சிகிச்சை அளித்தனர்.

சாலை மறியல்

தொடர்ந்து டாக்டர் எங்கே என பொதுமக்கள் செவிலியர்களிடம் கேள்வி எழுப்பினர். அப்போது பொதுமக்களுக்கும், செவிலியர்களுக்கும் இடையே சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த நிலையில் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் மருத்துவமனை அருகே குளக்காநத்தம்- பெரம்பலூர் சாலையின் குறுக்கே மரக்கட்டைகளை போட்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த டாக்டர் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு வந்து வீரமணிக்கு சிகிச்சை அளித்தார். தொடர்ந்து முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு வீரமணி கொண்டுசெல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பேச்சுவார்த்தை

தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள் காரை அரசு ஆரம்பசுகாதார நிலையத்தில் கூடுதல் டாக்டர்களை பணியில் அமர்த்தக்கோரி பல்வேறு கோ‌‌ஷங்களை எழுப்பினர். இதுகுறித்து தகவல் அறிந்த பாடாலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகந்தி, குளக்காநத்தம் பிரிக்கா வருவாய் ஆய்வாளர் கிரில்சுதன்ராஜா ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மறியலில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், காரை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 2 டாக்டர்கள் மட்டுமே பணியில் உள்ளனர். அவர்களும் சரியாக பணிக்கு வருவதில்லை. இதனால் மருத்துவ மனைக்கு வரும் நோயாளிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர்.

போக்குவரத்து பாதிப்பு

இதுகுறித்து நடவடிக்கை எடுத்து காரை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 24 மணி நேரமும் டாக்டர்கள் சுழற்சி முறையில் பணியாற்றும் வகையில் கூடுதலாக டாக்டர்களை நியமிக்க வேண்டும். மேலும் அவர்கள் மருத்துவமனையில் இருக்கின்றனரா? என கண்காணிக்க வேண்டும் என்று கூறினர். இதையடுத்து அதிகாரிகள் கூறுகையில், உங்களது கோரிக்கைகள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் எடுத்துரைத்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதனை ஏற்றுக்கொண்ட அவர்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் குளக்காநத்தம்- பெரம்பலூர் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story