கொத்தனார் மர்ம சாவு அடித்துக்கொலை செய்யப்பட்டதாக கூறி உறவினர்கள் சாலை மறியல்


கொத்தனார் மர்ம சாவு அடித்துக்கொலை செய்யப்பட்டதாக கூறி உறவினர்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 14 Oct 2019 11:00 PM GMT (Updated: 14 Oct 2019 8:09 PM GMT)

திருவரங்குளம் அருகே கொத்தனார் மர்மமான முறையில் தூக்கில் பிணமாக தொங்கினார். இந்நிலையில் சொத்து தகராறு காரணமாக அடித்துக்கொலை செய்யப்பட்டதாக கூறி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருவரங்குளம்,

திருவரங்குளம் அருகே உள்ள கொத்தக்கோட்டையை சேர்ந்தவர் சுதாகர் (வயது 35) கொத்தனார். இவர் தனது மனைவி பேபி ராணியுடன் தோப்புக்கொல்லையில் வசித்து வருகிறார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் சுதாகர் வீட்டில் தூக்கில் மர்மமான முறையில், பிணமாக தொங்கினார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த சுதாகரின் மனைவி மற்றும் தயார் கதறி அழுதனர்.

இது குறித்து தகவல் அறிந்த வல்லத்திராக்கோட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சுதாகரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வல்லத்திராக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து சுதாகர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்பது உள்பட பல்வேறு கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சுதாகருக்கும், அவரது உறவினரான தங்கவேலு மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் சொத்து தகராறு இருந்து வந்ததாகவும், சுதாகரின் உடலில் காயங்கள் இருப்பதால், சுதாகரை சொத்து தகராறு காரணமாக தங்கவேலு மற்றும் அவரது குடும்பத்தினர் கொலை செய்து விட்டு, தூக்கில் தொங்கவிட்டு உள்ளனர் எனக்கூறி சுதாகரின் உறவினர்கள் புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை அருகே புதுக்கோட்டை-தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த கணேஷ்நகர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதில் உடன்பாடு ஏற்பட்டதால் மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் புதுக்கோட்டை-தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.


Next Story