கல் பட்டறை உரிமையாளருக்கு அரிவாள் வெட்டு மர்மநபர்களை கைது செய்யக்கோரி உறவினர்கள் சாலை மறியல்


கல் பட்டறை உரிமையாளருக்கு அரிவாள் வெட்டு மர்மநபர்களை கைது செய்யக்கோரி உறவினர்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 15 Oct 2019 11:00 PM GMT (Updated: 15 Oct 2019 3:32 PM GMT)

புதுக்கோட்டையில் கல் பட்டறை உரிமையாளரை அரிவாளால் வெட்டிய மர்மநபர்களை கைது செய்யக்கோரி அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை திருக்கோகர்ணம் புதுத்தெருவை சேர்ந்தவர் ரெங்கராஜ். இவரது மகன் கோபிகமல் (வயது 36). இவர் புதுக்கோட்டை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கல் பட்டறை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று காலையில் கோபிகமல் கல் பட்டறையில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்மநபர்கள் கோபிகமலை அரிவாளால் பயங்கரமாக வெட்டிவிட்டு தப்பி சென்றனர்.

இதில் படுகாயமடைந்த கோபிகமலை, அவரது உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக மதுரையில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்த புகாரின் பேரில் திருக்கோகர்ணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கோபிகமலை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

உறவினர்கள் சாலை மறியல்

இதற்கிடையில் கோபிகமலை அரிவாளால் வெட்டிய மர்மநபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் எனக்கூறி, கோபிகமலின் உறவினர்கள் புதுக்கோட்டை-திருச்சி தேசியநெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த டவுன் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மர்மநபர்களால் அரிவாளால் வெட்டப்பட்ட கோபிகமலை கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிலர் அரிவாளால் வெட்டினார்கள். இந்த வழக்கு தற்போது நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாகவும், இந்த வழக்கில் விரைவில் தீர்ப்பு வரவுள்ள நிலையில் கோபிகமலை மர்மநபர்கள் அரிவாளால் வெட்டி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story