மத்திய அரசின் புதிய சட்டத்தை திரும்ப பெறக்கோரி நாகையில், மீனவர்கள் ஆர்ப்பாட்டம்


மத்திய அரசின் புதிய சட்டத்தை திரும்ப பெறக்கோரி நாகையில், மீனவர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 15 Oct 2019 11:00 PM GMT (Updated: 15 Oct 2019 4:14 PM GMT)

மத்திய அரசின் புதிய சட்டத்தை திரும்ப பெறக்கோரி நாகையில் மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகப்பட்டினம்,

மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் வகையில் வளர்ச்சி திட்டம் என்ற பெயரில் சாகர்மாலா, ஹைட்ரோகார்பன், அனல்மின், அணுமின் உள்ளிட்ட திட்டங்களையும் சட்டங்களையும் மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இந்த திட்டங்களையும், சட்டங்களையும் திரும்ப பெற வேண்டும். மீனவர்களுக்கும், மீன்பிடிப்புக்கும் மொத்தமாக சாவு மணி அடிக்க மத்திய அரசு புதிதாக கொண்டு வந்துள்ள கடல் மீன்பிடி ஒழுங்குபடுத்துதல் மற்றும் மேலாண்மை சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைளை வலியுறுத்தி நாகை மீன்வளத்துறை இணை இயக்குனர் அலுவலக நுழைவு வாயில் முன்பு மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதை தொடர்ந்து மீன்வளத்துறை இணை இயக்குனரை சந்தித்து மனு கொடுப்பதற்காக மீனவர்கள் சென்றனர். அப்போது அங்கு நாகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதாகிரு‌‌ஷ்ணன் தலைமையில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மீனவர்களை தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து ஒரு மீனவ கிராமத்தில் இருந்து ஒருவர் மட்டும் உள்ளே செல்லவேண்டும். அனைவரும் உள்ளே செல்ல அனுமதி கிடையாது என கூறினர்.

கோரிக்கை மனு

இதையடுத்து குறிப்பிட்ட சில மீனவர்கள் மட்டும் இணை இயக்குனர் அமல்சேவியரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

மத்திய அரசு புதிதாக கொண்டு வந்துள்ள கடல் மீன்பிடி ஒழுங்குபடுத்துதல் மற்றும் மேலாண்மை சட்டத்தால் ஓட்டு மொத்த மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். மத்திய அரசுடன் பதிவு செய்யப்பட்ட படகுகள் மற்றும் மீன்பிடி கப்பல்கள் மட்டுமே கடலில் 200 நாட்டிக்கல் மைல் தூரம் சென்று மீன்பிடிக்க முடியும். மாநில அளவில் மீன்வளத்துறையில் பதிவு செய்யப்பட்ட படகுகள் 12 நாட்டிக்கல் மைல் தூரம் மட்டுமே மீன் பிடிக்க முடியும் என்று மறைமுகமாக சொல்லப்படுகிறது. மீறினால் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று உள்ளது. எனவே மத்திய அரசின் கடல் மீன்பிடி ஒழுங்குபடுத்துதல் மற்றும் மேலாண்மை சட்டத்தை திரும்ப பெற வேண்டும். இந்த சட்டத்தை மாநில அரசு கண்டு கொள்ளாமல் இருப்பதை கைவிட்டு சட்டத்தை திரும்ப பெற மத்திய அரசிடம் வற்புறுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story