நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெறும் முத்தரசன் சொல்கிறார்


நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெறும் முத்தரசன் சொல்கிறார்
x
தினத்தந்தி 16 Oct 2019 11:15 PM GMT (Updated: 16 Oct 2019 6:59 PM GMT)

நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெறும் என்று சேலத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்தார்.

சேலம்,

மத்திய பா.ஜனதா அரசின் மோசமான பொருளாதார கொள்கைகளின் காரணமாக இந்தியாவில் இதுவரை கண்டிராத பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் தொழிற்சாலைகள் மூடல், தொழிலாளர்கள் வேலையிழப்பு மற்றும் வேலையின்மை அதிகரித்து கொண்டே இருக்கிறது. விவசாயிகளும், விவசாய தொழிலாளர்களும் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து வருகிறார்கள்.

தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும்

மூடப்படும் தொழில் நிறுவனங்களை பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் மத்திய அரசு தங்களது பொருளாதார கொள்கைகளை மாற்றிக்கொள்ள வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் இடதுசாரிகள் சார்பில் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம். நீட் தேர்வு பயிற்சி மையங்களில் நடக்கும் முறைகேடுகள் உயர் அதிகாரிகள் அனுமதி இல்லாமல் நடந்திருக்க வாய்ப்பில்லை. இது குறித்து முழுமையாக விசாரணை நடத்த வேண்டும்.

தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்பதே எங்களின் கருத்து. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதுபோல், நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெறும். அ.தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தரம் தாழ்ந்த பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றன. அதை அவர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story