சாத்தூர் அருகே கூலித்தொழிலாளியை கொன்ற மனைவி, மகன், மகள் கைது


சாத்தூர் அருகே கூலித்தொழிலாளியை கொன்ற மனைவி, மகன், மகள் கைது
x
தினத்தந்தி 3 Nov 2019 12:15 AM GMT (Updated: 3 Nov 2019 12:15 AM GMT)

சாத்தூர் அருகே கூலித்தொழிலாளியை கொன்று புதைத்த வழக்கில் அவரது மனைவி, மகன் மற்றும் மகளை போலீசார் கைது செய்தனர்.

சாத்தூர்,

சாத்தூர் அருகே உள்ள ஸ்ரீரங்காபுரம் தெற்கு தெருவை சேர்ந்தவர் சுப்புராஜ்(வயது 55). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி பிச்சையம்மாள்(45). இவர்களுக்கு சுரேஷ்(28) என்ற மகனும் பிரியா(23) என்ற மகளும் உள்ளனர். இந்தநிலையில் கடந்த 3 மாதத்துக்கு முன்பு சுப்புராஜ் மாயமானார்.

பல நாட்களாக காணாததால் சுப்புராஜின் சகோதரர்கள் அவரை தேடத் தொடங்கினர். அப்போது பிச்சையம்மாள், தனது கணவர் வேலை தேடி கேரளாவுக்கு சென்று விட்டதாக கூறியுள்ளார்.

ஆனால் சுப்புராஜ் மாதக்கணக்கில் வீடு திரும்பாததால் அவரது சகோதரர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. சுப்புராஜ் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று கருதினர். இந்த நிலையில் சுப்புராஜின் வீட்டின் அருகே குழி தோண்டி பின்னர் மூடப்பட்டு இருப்பது தெரிந்தது. இதுகுறித்து சாத்தூர் தாலுகா போலீசில் சுப்புராஜின் சகோதரர் கணேசன் புகார் செய்தார். இதைத்தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். வீட்டிற்கு வெளியே ஒரு இடத்தில் பாதி எரிந்த நிலையில் எலும்புகள் தென்பட்டன.

இதைதொடர்ந்து பிச்சையம்மாள், அவரது மகன் சுரேஷ், மகள் பிரியா ஆகியோரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. போலீசாரின் விசாரணையில், குடித்து தகராறு செய்த சுப்புராஜை பிச்சையம்மாள் தனது மகன், மகளுடன் சேர்ந்து கொலை செய்து, அவரது உடலை வீட்டின் அருகே குழிதோண்டி புதைத்ததும் தெரியவந்தது. இதைதொடர்ந்து பிச்சையம்மாள், சுரேஷ், பிரியா ஆகியோரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

சுப்புராஜ் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட இடத்தில் அவரது உடல் நாளை(திங்கட்கிழமை) தோண்டி எடுக்கப்படும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story