தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்க கோரி குமரியில் 16–ந் தேதி சாலை மறியல் வசந்தகுமார் எம்.பி. பேட்டி


தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்க கோரி குமரியில் 16–ந் தேதி சாலை மறியல் வசந்தகுமார் எம்.பி. பேட்டி
x
தினத்தந்தி 3 Nov 2019 11:00 PM GMT (Updated: 3 Nov 2019 4:09 PM GMT)

குமரி மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்க கோரி 16–ந் தேதி சாலை மறியல் போராட்டம் நடத்தப்பட இருப்பதாக வசந்தகுமார் எம்.பி. தெரிவித்தார்.

நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தில் காவல் கிணறு முதல் களியக்காவிளை வரை உள்ள தேசிய நெடுஞ்சாலை மிகவும் மோசமாக உள்ளது. இதனால் நிறைய விபத்துகள் ஏற்படுகின்றன. மேலும் சாலைகள் மேடும், பள்ளமுமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்படுகிறார்கள். எனவே பழுதான சாலைகளை சீரமைக்க கோரி பலமுறை புகார் அளித்துள்ளோம். மேலும் மறியல் போராட்டமும் நடத்தி இருக்கிறோம். ஆனாலும் மத்திய அரசு காது கேட்காதது போல் இருக்கிறது.

இந்த சாலைகளை சீரமைக்க கடந்த 2017–2018 மற்றும் 2018–2019 ஆகிய கால கட்டத்தில் நிதி ஒதுக்கப்பட்டு டெண்டரும் விடப்பட்டது. எனினும் சாலைகளை சீரமைக்காமல் மத்திய அரசு மெத்தனமாக உள்ளது. எனவே மோசமாக இருக்கும் தேசிய நெடுஞ்சாலையை உடனே சீரமைக்க வேண்டும்.

சாலை மறியல்

இல்லையென்றால் தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்க கோரி காங்கிரஸ், தி.மு.க. மற்றும் தோழமை கட்சிகள் சார்பில் 16–ந் தேதி குமரி மாவட்டத்தில் 5 இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும். அதாவது களியக்காவிளை, அழகியமண்டபம், வில்லுக்குறி, நாகர்கோவில் மற்றும் ஆரல்வாய்மொழி ஆகிய 5 இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும்.

இந்த சாலை மறியல் போராட்டத்துக்கு அந்தந்த தொகுதி எம்.எல்.ஏ.க்கள் தலைமை தாங்குவார்கள். மேலும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களையும் அழைத்து சாலை மறியல் போராட்டம் நடத்துவோம். இந்தியா முழுவதும் வளர்ச்சி என்று சொல்கிறார்கள். ஆனால் குமரி மாவட்டத்தில் சாலையை கூட சீரமைக்க முடியவில்லை. இந்த மறியல் போராட்டம் மூலம் மத்திய மாநில அரசுக்கு எச்சரிக்கையாக விடுக்கிறோம். பா.ஜனதாவுக்கு ஓட்டு போடாததால் குமரி மாவட்டம் புறக்கணிக்கப்படுகிறது. மேலும் எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்கள் எதிர் கட்சிகளை சேர்ந்தவர்களாக இருப்பதால் குமரி மாவட்டத்தை மத்திய அரசு புறக்கணிக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

எம்.எல்.ஏ.க்கள்

பேட்டியின் போது எம்.எல்.ஏ.க்கள் சுரேஷ்ராஜன், ஆஸ்டின், மனோ தங்கராஜ், ராஜேஷ்குமார், பிரின்ஸ், குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராதாகிருஷ்ணன் மற்றும் தி.மு.க., காங்கிரஸ் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.  


Next Story