தடையில்லா வணிக ஒப்பந்தத்தை கைவிடக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்


தடையில்லா வணிக ஒப்பந்தத்தை கைவிடக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 4 Nov 2019 11:00 PM GMT (Updated: 4 Nov 2019 10:09 PM GMT)

தடையில்லா வணிக ஒப்பந்தத்தை கைவிடக்கோரி புதுச்சேரியில் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி,

மலேசியா, சிங்கப்பூர், மியான்மர் உள்ளிட்ட 16 வெளிநாடுகளில் இருந்து விவசாய மற்றும் பால் உற்பத்தி பொருட்களை இறக்குமதி செய்து தாராளமாக விற்பனை செய்யும் ஒப்பந்தத்தினை இந்தியா மேற்கொள்ள உள்ளது. இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் முற்றிலும் சீரழிக்கப்படும் என்று விவசாய சங்கங்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இந்திய விவசாயிகளை முற்றிலும் சீரழிக்கும் இந்த தடையில்லா வணிக ஒப்பந்தத்தை கைவிடக்கோரி நேற்று நாடு தழுவிய விவசாயிகள் எதிர்ப்பு தினமாக கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி இந்தியா முழுவதும் நேற்று விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டம்

புதுவையில் இந்த ஆர்ப்பாட்டம் புதுவை தலைமை தபால் நிலையம் முன்பு நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு புதுச்சேரி விவசாயிகள் சங்க மாநில தலைவர் கீதநாதன், பொதுச்செயலாளர் ரவி ஆகியோர் தலைமை தாங்கினார்கள்.

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் சலீம், விவசாய தொழிலாளர் சங்க பொதுச்செயலாளர் பால கிருஷ்ணன் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள். ஆர்ப்பாட்டத்தில் ராஜா, கலியமூர்த்தி, பெருமாள், ராமச்சந்திரன், தாமோதரன், பிரகாஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

முன்னதாக அவர்கள் புதுவை நேரு வீதி-மிஷன் வீதி சந்திப்பு அருகில் இருந்து ஊர்வலமாக வந்து இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

Next Story