மீன் கழிவில் இருந்து அமினோ அமிலம் தயாரிக்க அரசு பள்ளி மாணவர்கள் முயற்சி


மீன் கழிவில் இருந்து அமினோ அமிலம் தயாரிக்க அரசு பள்ளி மாணவர்கள் முயற்சி
x
தினத்தந்தி 6 Nov 2019 10:45 PM GMT (Updated: 6 Nov 2019 6:55 PM GMT)

மீன் கழிவில் இருந்து மீன் அமினோ அமிலம் தயாரிக்க ஜாம்புவானோடை அரசு பள்ளி மாணவர்கள் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

முத்துப்பேட்டை,

முத்துப்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்கள் கடற்கரையை ஒட்டிய சதுப்பு நிலப்பகுதியாகும். அதனால் இங்கு மீன்கள் அதிக அளவில் கிடைகின்றன. இதனை நம்பி ஆயிரக் கணக்கான மீனவ குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். இதில் சுற்றுபகுதியை தவிர்த்து முத்துப்பேட்டை பகுதியில் மட்டும் ஒரு நாளைக்கு ஏறக்குறைய 2 டன்களுக்கு அதிகமான மீன்கள் விற்கப்படுகின்றன. இத்தகைய மீன்களை மக்கள் உணவிற்காக பயன்படுத்தியதுபோக எஞ்சிய கழிவுகளை குப்பைகளில் கொட்டுகின்றனர். இதனால் துர்நாற்றம், நீர்நிலை மாசுபாடு போன்றவை ஏற்படுகின்றன.

புதிய முயற்சி

இத்தகைய சுகாதார சீர்கேட்டிற்கு தீர்வு காணும் விதமாக முத்துப்பேட்டையை அடுத்த ஜாம்புவானோடை கல்லடிக்கொல்லை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்கள் கார்த்திக்ராஜா, பாலாஜி ஆகியோர், பள்ளியின் தலைமை ஆசிரியை கலாராணி, அறிவியல் பட்டதாரி ஆசிரியர் தினேஷ் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி மீன்கழிவில் இருந்து மீன்அமினோ அமிலம் தயாரிக்கும் புதிய முயற்சியை மேற்கொண்டனர்.

இந்தநிலையில் மாணவர்கள் ஆசிரியர்களுடன் முத்துப்பேட்டை ஆசாத்நகரில் உள்ள மீன் மார்க்கெட் மற்றும் அப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு சென்று அங்குள்ள மக்களிடம் காண்பித்து செயல்முறை விளக்கம் அளித்தனர். மேலும் மாணவர்கள் அப்பகுதி மக்களை மீன் அமினோ அமிலம் தயாரிக்க ஊக்குவித்தனர். இந்த மாணவர்களின் முயற்சியை அப்பகுதி மக்கள் பாராட்டினர். இதுகுறித்து மாணவர்கள் கார்த்திக்ராஜா, பாலாஜி ஆகியோர் கூறுகையில், இந்த முறையை தமிழக அரசும், வேளாண் ஆர்வலர்களும் முன்னெடுத்து மேற்கொண்டால் மீன் கழிவுகள் மறுசுழற்சி செய்யப்பட்டு சுற்றுச்சூழல் காக்கப்படும் என கூறினர்.

Next Story