குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ.18 ஆயிரம் வழங்க வேண்டும் அங்கன்வாடி ஊழியர்கள் மாநாட்டில் வலியுறுத்தல்


குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ.18 ஆயிரம் வழங்க வேண்டும் அங்கன்வாடி ஊழியர்கள் மாநாட்டில் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 10 Nov 2019 10:30 PM GMT (Updated: 10 Nov 2019 7:25 PM GMT)

குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ.18 ஆயிரம் வழங்கிட வேண்டும் என அங்கன்வாடி ஊழியர்கள் மாநாட்டில் வலியுறுத்தினர்.

கரூர்,

தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் வட்டார மூன்றாவது மாநாடு, கரூர் அரசு ஊழியர் சங்க கட்டிடத்தில் நடந்தது. இதற்கு வட்டாரத்தலைவர் வசந்தி தலைமை தாங்கினார். இதில் சி.ஐ.டி.யு. மாவட்டத்தலைவர் ஜீவானந்தம் மாநாட்டை தொடங்கி வைத்து பேசினார். வட்டார செயலாளர் மணிமேகலை வேலை அறிக்கையையும், பொருளாளர் பி.செல்வி வரவு-செலவு அறிக்கையையும் வாசித்தனர். இந்த மாநாட்டில் அனைத்து அங்கன்வாடி பணியாளர்களையும் அரசு ஊழியர்களாக்க வேண்டும், குறைந்தபட்ச மாத ஊதியமாக ரூ.18 ஆயிரம் வழங்கிட வேண்டும்.

விடுமுறை வழங்க வேண்டும்

மாதாந்திர ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம் கிடைத்திட வேண்டும், சனிக்கிழமை விடுமுறை வழங்கிட வேண்டும், பணி ஓய்வின்போது அங்கன்வாடி பணியாளர்களுக்கு ரூ.5 லட்சமும், உதவியாளர்களுக்கு ரூ.3 லட்சமும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாநாட்டில் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்க மாநில பொருளாளர் எம்.பாக்கியம், சி.ஐ.டி.யு. மாவட்டச் செயலாளர் சி.முருகேசன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டத்தலைவர் மகாவிஷ்ணன், முன்னாள் தலைவர் சுப்ரமணியன், தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்க மாநில உதவிச் செயலாளர் ரத்தினமாலா, மாவட்டச் செயலாளர் சாந்தி, தலைவர் பத்மாவதி உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story