மாயமானவர் பிணமாக கிடந்த வழக்கில் திடீர் திருப்பம்: தொழிலாளியை காரில் கடத்தி கொலை 4 பேர் கைது


மாயமானவர் பிணமாக கிடந்த வழக்கில் திடீர் திருப்பம்: தொழிலாளியை காரில் கடத்தி கொலை 4 பேர் கைது
x
தினத்தந்தி 10 Nov 2019 11:00 PM GMT (Updated: 10 Nov 2019 7:55 PM GMT)

மாயமான தொழிலாளி பிணமாக கிடந்த வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. அவரை காரில் கடத்திச்சென்று கொலை செய்ததாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

வெண்ணந்தூர்,

நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் அருகே உள்ள அக்கரைப்பட்டியை சேர்ந்தவர் தங்கவேல் (வயது 38). கூலித்தொழிலாளி. இவரது மனைவி கமலம். இவர், கடந்த மாதம் 23-ந் தேதி முதல் தனது கணவரை காணவில்லை என வெண்ணந்தூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, காணாமல் போன தங்கவேலை தேடி வந்தனர்.

இந்த நிலையில் கடந்த 8-ந் தேதி மொளசி போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பட்லூர் காவிரி ஆற்றில் அடையாளம் தெரியாத ஆண் பிணம் மிதப்பதாக கிடைத்த தகவலின் பேரில், மொளசி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது காணாமல் போன தங்கவேலுவின் வயதை ஒட்டிய பிணமாக இருப்பதால், அவரின் மனைவி கமலத்தை வெண்ணந்தூர் போலீசார் அழைத்துச் சென்று பிணத்தை அடையாளம் காட்ட சொன்னபோது, பிணத்தின் மீது இருந்த ஆடைகளை வைத்து, தனது கணவர் தங்கவேல் தான் என்று அவர் கூறினார். பின்னர் பிரேத பரிசோதனைக்கு பிறகு தங்கவேலுவின் உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

கொலை

இந்த நிலையில் நேற்று முன்தினம் ராசிபுரம் தாலுகா அக்கரைப்பட்டி கிராம நிர்வாக அலுவலர் ரவிக்குமார் முன்னிலையில் திருச்செங்கோடு தாலுகா சூரியகவுண்டம்பாளையத்தை சேர்ந்த சுரேஷ் (35) என்பவர், தனது நண்பர்கள் வடுகபாளையத்தை சேர்ந்த விஷ்ணு (21), மல்லசமுத்திரம் சீனு என்கிற விக்னேஷ் (27), ஊமநாய்க்கன்பாளையத்தை சேர்ந்த ரஞ்சித்குமார் (21) ஆகியோருடன் சேர்ந்து தங்கவேலுவை அடித்து கொலை செய்து விட்டதாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்து சரண் அடைந்தார்.

இதையடுத்து சுரேசை கிராம நிர்வாக அலுவலர் ரவிக்குமார், வெண்ணந்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமாரிடம் ஒப்படைத்தார்.

பரபரப்பு தகவல்கள்

சுரேசிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியானது.

தங்கவேல் ஒரு காரை சுரேசிடம் அடமானம் வைத்து ரூ.1½ லட்சம் கடன் பெற்று திருப்பி தராமல் இருந்து வந்துள்ளார். பின்னர் சுரேசுக்கு தெரியாமல் அவரது வீட்டில் இருந்த காரை எடுத்து சென்றுள்ளார். இதனால் கோபமடைந்த சுரேஷ், கடந்த மாதம் 23-ந் தேதி மொபட்டில் வந்த தங்கவேலை ரஞ்சித்குமார், விக்னேஷ் மற்றும் விஷ்ணு ஆகியோருடன் காரில் கடத்தி சென்றுள்ளார். பின்னர் சின்ன காளிப்பட்டியில் உள்ள சுரேசின் தோட்டத்தில் வைத்து கொலை செய்து இருப்பதும், கொலையை மறைக்க 4 பேரும் தங்கவேலின் பிணத்தை காரில் எடுத்து சென்று கொக்கராயன்பேட்டை பாலம் அருகே காவிரி ஆற்றில் வீசி விட்டு அவரவர் வீட்டிற்கு சென்று இருப்பதும் அம்பலமானது.

4 பேர் கைது

மேலும் தினமும் ஆற்றங்கரையில் ஏதேனும் பிணம் ஒதுங்கி உள்ள செய்தி பத்திரிகையில் வருகிறதா? என்று பார்த்து கொண்டிருந்ததாகவும், 8-ந் தேதி தங்கவேலின் பிணத்தை காவிரி ஆற்றிலிருந்து மொளசி போலீசார் எடுத்ததை தெரிந்து கொண்டதாகவும், அதனால் போலீசார் எப்படியும் கண்டுபிடித்து விடுவார்கள் என்ற பயத்தில் கிராம நிர்வாக அலுவலரிடம் சரண் அடைந்ததாகவும் சுரேஷ் போலீசாரிடம் கூறியுள்ளார்.

அதன் அடிப்படையில், தங்கவேல் காணாமல் போனதாக பதிவு செய்யப்பட்ட வழக்கை வெண்ணந்தூர் போலீசார் கொலை வழக்காக மாற்றம் செய்தனர். மேலும் சுரேசிடம் இருந்து தங்கவேலை கொலை செய்ய பயன்படுத்திய கேபிள் வயர் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். இதேபோல் தங்கவேல் பயன்படுத்திய மொபட்டையும் சுரேசின் தோட்டத்தில் இருந்து கைப்பற்றினர். இதையடுத்து சுரேசை போலீசார் கைது செய்தனர்.

மேலும் தலைமறைவாக இருந்த 3 பேரையும் தேடி வந்தனர். இந்த நிலையில் வெண்ணந்தூர் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையிலான தனிப்படை போலீசார் சப்பையாபுரம் அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டபோது அந்த வழியாக காரில் வந்த விஷ்ணு, விக்னேஷ், ரஞ்சித்குமார் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கொலைக்கு பயன்படுத்தப்பட்ட காரும் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில் துரிதமாக செயல்பட்டு துப்பு துலக்கிய ராசிபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயராகவன், வெண்ணந்தூர் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் தனிப்படை போலீசாரை போலீஸ் சூப்பிரண்டு அருளரசு பாராட்டினார். 

Next Story