பயிர்க்காப்பீட்டு தொகை வழங்கக்கோரி விவசாயிகள் சாலை மறியல்


பயிர்க்காப்பீட்டு தொகை வழங்கக்கோரி விவசாயிகள் சாலை மறியல்
x
தினத்தந்தி 12 Nov 2019 11:00 PM GMT (Updated: 12 Nov 2019 7:00 PM GMT)

பயிர்க்காப்பீட்டு தொகை வழங்கக்கோரி விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கோட்டூர்,

திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே உள்ள சேரி ஊராட்சிக்கு உட்பட்ட மேலகண்டமங்கலம், கீழகண்டமங்கலம், கீழச்சேரி, மேலச்சேரி ஆகிய கிராமங்களை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மழவராயநல்லூர் கூட்டுறவு கடன் சங்கத்தில் 2018-19-ம் ஆண்டுக்கான பயிர்க்காப்பீடு திட்டத்தில் பயிர்க்காப்பீடு செய்தனர். கஜா புயலால் பாதிப்பு ஏற்பட்ட நிலையில் இந்த பகுதியை சேர்ந்த விவசாயிகளுக்கு இதுவரை பயிர்க்காப்பீட்டு தொகை வழங்கப்படவில்லை.

இதுதொடர்பாக விவசாயிகள் பல முறை போராட்டங்கள் நடத்தி உள்ளனர். ஆனாலும் பயன் இல்லை. இந்த நிலையில் பயிர்க்காப்பீட்டு தொகை வழங்க நடவடிக்கை எடுக்காத வேளாண்மை துறை அதிகாரிகளை கண்டித்தும், பயிர்க்காப்பீட்டு தொகையை விரைந்து வழங்கக்கோரியும் நேற்று விவசாயிகள் சேரி ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை

போராட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்டக்குழு உறுப்பினர் பழனி, தி.மு.க. கிளை செயலாளர் கனகநாதன் ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டு பயிர்க்காப்பீட்டு தொகை வழங்கிட வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

இதுபற்றி தகவல் அறிந்த மாவட்ட வேளாண்மை துணை இயக்குனர் ரவீந்திரன், திருத்துறைப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு பழனிசாமி மற்றும் போலீசார் அங்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் இந்த மாதம் இறுதிக்குள் பயிர்க்காப்பீட்டு தொகை முழுவதும் வழங்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். அதன்பேரில் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். மறியல் காரணமாக திருத்துறைப்பூண்டி-மன்னார்குடி சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

முத்துப்பேட்டை

முத்துப்பேட்டை ஒன்றியத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மருதவனம், ஆரியலூர், தில்லைவிளாகம், கீழநம்மங்குறிச்சி, உப்பூர், விளாங்காடு, கற்பகநாதர்குளம், பின்னத்தூர், வேப்பஞ்சேரி, குன்னலூர், கோவிலூர், மங்கலூர், கழுவங்காடு, கள்ளிக்குடி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகளுக்கு பயிர்க்காப்பீட்டு தொகை வழங்கப்படவில்லை. இதை கண்டித்தும், பயிர்க்காப்பீட்டு தொகை வழங்கக்கோரியும் நேற்று முத்துப்பேட்டை பழைய பஸ் நிலையத்தில் விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் முருகையன், தி.மு.க. ஒன்றிய செயலாளர் மனோகரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் வட்டார காங்கிரஸ் தலைவர்கள் வடுகநாதன், பாலகிருஷ்ணன், த.மா.கா. மாநில கொள்கை பரப்பு செயலாளர் காமராஜ், தி.மு.க. ஒன்றிய துணை செயலாளர் ராஜேந்திரன், பாசனதாரர் சங்க தலைவர் ஜீவானந்தம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

போக்குவரத்து பாதிப்பு

இதுகுறித்து தகவல் அறிந்த திருத்துறைப்பூண்டி தாசில்தார் ராஜன்பாபு, வேளாண்மை துறை உதவி இயக்குனர் முரளிபாபு, முத்துப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு இனிகோதிவ்யன், இன்ஸ்பெக்டர் ராஜேஷ் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதில் விரைவில் பயிர்க்காப்பீடு தொகை கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். அதன்பேரில் சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. போராட்டம் காரணமாக அந்த பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story