விழுப்புரத்தில் தி.மு.க. பிரமுகர் கழுத்தை அறுத்து படுகொலை உறவினர் உள்பட 7 பேர் கைது


விழுப்புரத்தில் தி.மு.க. பிரமுகர் கழுத்தை அறுத்து படுகொலை உறவினர் உள்பட 7 பேர் கைது
x
தினத்தந்தி 23 Nov 2019 11:15 PM GMT (Updated: 23 Nov 2019 5:46 PM GMT)

விழுப்புரத்தில் தி.மு.க. பிரமுகர் கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவரது உறவினர் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம்,

விழுப்புரம் பூந்தோட்டம் மேல்வன்னியர் தெருவை சேர்ந்தவர் மணி மகன் பாலாஜி (வயது 38). தி.மு.க.வை சேர்ந்த இவர் விழுப்புரம் நகராட்சி 23-வது வார்டு செயலாளராக இருந்தார். மேலும் இவர் விழுப்புரம் வழுதரெட்டி பகுதியில் உள்ள பஸ் பாடி கட்டும் ஒர்க்‌ஷாப்பில் மெக்கானிக்காக பணியாற்றி வந்தார்.

இவர் நேற்று முன்தினம் காலை வழக்கம்போல் வேலைக்கு சென்றார். ஆனால் இரவு வெகு நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அவரது உறவினர்கள் பல இடங்களில் தேடி பார்த்தும், அவர் கிடைக்கவில்லை.

கழுத்தை அறுத்து படுகொலை

இந்த நிலையில் பாலாஜி விழுப்புரம் புறவழிச்சாலையில் ஒரு ஓட்டலின் பின்புறம் உள்ள குட்டையில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையிலும், உடலில் வெட்டுக்காயங்களுடனும் பிணமாக கிடந்தார். இதுபற்றி தகவலறிந்த போலீசார் விரைந்து சென்று பிணத்தை மீட்டு விசாரணை நடத்தியபோது, அவரை யாரோ கழுத்தை அறுத்து படுகொலை செய்து விட்டு, உடலை குட்டையில் வீசிவிட்டு சென்றிருந்தது தெரியவந்தது.

போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில், சொத்து பிரச்சினை காரணமாக இந்த கொலை நடந்திருப்பதும், இதில் பாலாஜியின் உறவினரான விழுப்புரம் திருக்காமு நகரை சேர்ந்த பன்னீர்செல்வத்தின் மகன் ராஜா (45) என்பவருக்கு தொடர்பு இருப்பதும் தெரியவந்தது. தொடர்ந்து, ராஜா உள்ளிட்ட கொலையாளிகளை போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.

7 பேர் கைது

இந்நிலையில் நேற்று காலை விழுப்புரம் பஸ் நிலையத்தில் இருந்து வெளியூருக்கு தப்பிச்செல்ல முயன்ற ராஜாவை போலீசார் மடக்கிப்பிடித்தனர். தொடர்ந்து, ராஜா கொடுத்த தகவலின்பேரில் அவரது நண்பர்களான விழுப்புரம் அருகே பெரும்பாக்கத்தை சேர்ந்த சண்முகம் மகன் விஜயகுமார் (25), கோவிந்தசாமி மகன் மன்னர்மன்னன் (45), குமார் மகன் மகே‌‌ஷ் (27), கொண்டங்கியை சேர்ந்த கண்ணன் மகன் தினே‌‌ஷ் (28), தோகைப்பாடியை சேர்ந்த அய்யாசாமி மகன் அய்யனார் (32), சின்னசேலத்தை சேர்ந்த சின்னப்பிள்ளை மகன் சண்முகம் (46) ஆகியோரையும் போலீசார் மடக்கிப்பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் பாலாஜியை கொலை செய்ததை அவர்கள் 7 பேரும் ஒப்புக்கொண்டனர்.

இதையடுத்து ராஜா உள்பட 7 பேர் மீதும் கொலை வழக்குப்பதிவு செய்து அவர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் களிடம் இருந்து கொலைக்கு பயன்படுத்திய 4 கத்திகள், 2 வீச்சரிவாள்கள் மற்றும் ஒரு கார், 2 மோட்டார் சைக்கிள்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் 7 பேரையும் விழுப்புரம் கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தி வேடம்பட்டில் உள்ள மத்திய சிறையில் அடைத்தனர்.

கொலை செய்யப்பட்ட பாலாஜிக்கு ரேகா, கற்பகம் என்ற 2 மனைவிகளும், பரத் (14), ரித்தீ‌‌ஷ் (8) என்ற 2 மகன்களும், ராகவி (11), ரூபிகா (6) என்ற 2 மகள்களும் உள்ளனர்.


Next Story