சீர்காழியில், வீடு புகுந்து பாட்டி-பேத்தி கொலை: மேலும் 2 பேர் கைது


சீர்காழியில், வீடு புகுந்து பாட்டி-பேத்தி கொலை: மேலும் 2 பேர் கைது
x
தினத்தந்தி 23 Nov 2019 11:15 PM GMT (Updated: 23 Nov 2019 6:59 PM GMT)

சீர்காழியில் வீடு புகுந்து பாட்டி-பேத்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

சீர்காழி,

நாகை மாவட்டம், சீர்காழி ஈசானிய தெருவை சேர்ந்தவர் முகமது யூனூஸ். இவருடைய மனைவி ராபியா பீவி(வயது 40). இவர், தனது மகள் சமீராபானு(20), மாமியார் ஹதிஜாபீவி (60) ஆகியோருடன் வசித்து வந்தார்.

கடந்த 2011-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 21-ந் தேதி வீட்டில் தனியாக இருந்த சமீராபானு, ஹதிஜாபீவி ஆகிய இருவரும் கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் வீட்டில் பிணமாக கிடந்தனர்.

சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை

இது குறித்து ராபியா பீவி கொடுத்த புகாரின்பேரில் சீர்காழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். ஆனால் பல ஆண்டுகளாகியும் இந்த வழக்கில் துப்பு துலங்கவில்லை.

இதைத்தொடர்ந்து இந்த வழக்கு கடந்த ஆண்டு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டது. சி.பி.சி.ஐ.டி. போலீசார் இந்த வழக்கில் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.

வாலிபர் சரண்

போலீசாரின் தீவிர விசாரணையில், கடலூர் மாவட்டம் புதுப்பாளையம், ராமதாஸ் நாயுடு தெருவை சேர்ந்த ரவீந்திரன் மகன் சுரே‌‌ஷ்(27), அவரது நண்பர்கள் கடலூர் பாதிரிக்குப்பத்தை சேர்ந்த சேகர் மகன் தினே‌‌ஷ்குமார்(32), கடலூர் காராமணிகுப்பத்தை சேர்ந்த ராமநாதன் மகன் கமல்(30), கடலூரை சேர்ந்த ஆனந்தன் ஆகியோர் சேர்ந்து கடந்த 2011-ம் ஆண்டு சீர்காழி ஈசானிய தெருவில் முகமது யூனூஸ் வீடு புகுந்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டபோது சமீராபானு, ஹதிஜாபீவி ஆகியோரை வெட்டிக்கொலை செய்தது தெரிய வந்தது.

இதைத்தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் சுரேசின் வீட்டுக்கு சென்று அவரது பெற்றோரிடம் விசாரணை செய்தனர். இதை அறிந்த சுரே‌‌ஷ், நாகை, அந்தனப்பேட்டை கிராம நிர்வாக அலுவலர் செல்வத்திடம் சரண் அடைந்தார்.

3 பேருக்கு வலைவீச்சு

அவர் கொடுத்த தகவலின் பேரில் போலீசார் சுரேசை கைது செய்து நாகை கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கு தொடர்பாக தினே‌‌ஷ்குமார், கமல், ஆனந்தன் ஆகிய 3 பேரை போலீசார் தேடி வந்தனர்.

மேலும் 2 பேர் கைது

சுரே‌‌ஷ் கைது செய்யப் பட்டதை அறிந்த அவரது நண்பர்கள் தினே‌‌ஷ்குமார், கமல் ஆகிய இருவரும் நேற்று கடலூரில் இருந்து ரெயிலில் நாகை ரெயில் நிலையத்துக்கு வந்தனர். இதை அறிந்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் தினே‌‌ஷ்குமார், கமல் ஆகிய இருவரையும் கைது செய்து நாகை கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கு தொடர்பாக தலைமறைவாக உள்ள ஆனந்தனை போலீசார் தேடி வருகின்றனர்.

பாட்டி-பேத்தி கொலை வழக்கில் 8 ஆண்டுகளுக்கு பிறகு கொலையாளிகள் கைது செய்யப்பட்ட சம்பவம் சீர்காழி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story