மார்த்தாண்டம் மேம்பால பகுதியில் விபத்து: அடுத்தடுத்து 4 வாகனங்கள் மோதல்; 3 பேர் காயம் - போக்குவரத்து பாதிப்பு


மார்த்தாண்டம் மேம்பால பகுதியில் விபத்து: அடுத்தடுத்து 4 வாகனங்கள் மோதல்; 3 பேர் காயம் - போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 26 Nov 2019 10:26 PM GMT (Updated: 26 Nov 2019 10:26 PM GMT)

மார்த்தாண்டம் மேம்பால பகுதியில் 4 வாகனங்கள் அடுத்தடுத்து மோதிய விபத்தில் 3 பேர் காயமடைந்தனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

குழித்துறை,

மார்த்தாண்டம் பம்மத்தில் இருந்து வெட்டுமணி வரை நவீன முறையில் இரும்பு மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மேம்பாலம் அமைத்து ஒரு வருடம் கூட ஆகவில்லை. ஆனால் அடிக்கடி வாகன விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன.

இந்தநிலையில் நேற்று காலையில் மதுரையை சேர்ந்த டிரைவர் காளிதாஸ் (வயது 46) மதுரையில் இருந்து பழங்களை டெம்போவில் ஏற்றிவந்தார். அப்போது டெம்போ மார்த்தாண்டம் மேம்பாலம் வழியாக களியக்காவிளை நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராத விதமாக மோதியதில் தாறுமாறாக ஓடிய டெம்போ எதிரே வந்து கொண்டிருந்த கார் மற்றும் தனியார் கல்லூரி பஸ்சில் பயங்கரமாக மோதியது. இதில் பஸ்சில் இருந்த கல்லூரி மாணவ, மாணவிகள் அதிர்ச்சியில் அலறினர்.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளை ஓட்டிவந்த கேரள மாநிலம் நெய்யாற்றின்கரையை ேசர்ந்த தொழிலாளி சுனில் (32), அவருக்கு பின்னால் அமர்ந்திருந்த சிறிகுட்டன் (27) மற்றும் டெம்போ டிரைவர் காளிதாஸ் ஆகிய 3 பேர் காயமடைந்தனர். அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு மார்த்தாண்டத்தில் ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த மார்த்தாண்டம் போலீசார் உடனே சம்பவ இடத்திற்கு வந்து விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனர். மேலும் இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் ஜெயகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுத்தடுத்து 4 வாகனங்கள் மோதிய விபத்தால், அப்பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story