பஞ்சப்பட்டி ஏரிக்கு தண்ணீர் கொண்டுவர நடவடிக்கை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தகவல்


பஞ்சப்பட்டி ஏரிக்கு தண்ணீர் கொண்டுவர நடவடிக்கை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தகவல்
x
தினத்தந்தி 30 Nov 2019 11:00 PM GMT (Updated: 30 Nov 2019 5:48 PM GMT)

கரூர் மாவட்டம் பஞ்சப்பட்டி ஏரிக்கு தண்ணீர் கொண்டுவர உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

கரூர்,

கரூர் காந்தி கிராமம் பகுதியில் தமிழ்நாடு காகித ஆலை நிறுவனத்தின் சமூக மேம்பாட்டு நிதியின் மூலம் பூங்கா புனரமைப்பு பணிகள், பழையஜெயங்கொண்டம் பேரூராட்சிக்குட்பட்ட குப்பிரெட்டிபாளையத்தில் ரூ.1¼ கோடி மதிப்பிலான புதிய சாலைப்பணிகள், சிவன்கோவில் அருகில் ரூ.1 கோடியே 60 லட்சம் மதிப்பிலான புதிய குடிநீர் திட்ட விரிவாக்கப்பணிகளை போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நேற்று பூமிபூஜையிட்டு தொடங்கி வைத்தார்.

இதில் மாவட்ட கலெக்டர் அன்பழகன், கீதா எம்.எல்.ஏ., பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் குருராஜன், திருச்சி மத்திய கூட்டுறவு வங்கித்தலைவர் ஏ.ஆர்.காளியப்பன், கரூர் நகராட்சி ஆணையர் சுதா, கரூர் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு ஒன்றியத்தலைவர் எம்.எஸ்.மணி, வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தலைவர் வி.சி.கே.ஜெயராஜ் (கரூர்), மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் தானே‌‌ஷ், தமிழ்நாடு காகித ஆலை பொதுமேலாளர் பட்டாபிராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பஞ்சப்பட்டி ஏரியில் அமைச்சர் ஆய்வு

முன்னதாக, கிரு‌‌ஷ்ணராயபுரம் வட்டத்திற்கு உட்பட்ட பஞ்சப்பட்டி ஏரியை விவசாய சங்க பிரதிநிதிகளுடன் சென்று போக்குவரத்து துறை அமைச்சர் பார்வையிட்டார். அப்போது சீமைக்கருவேல மரங்கள் சூழ்ந்து வறண்ட நிலையிலிருக்கும் அந்த ஏரிக்கு தண்ணீர் கொண்டுவருவதற்கான திட்டம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பின்னர் இது தொடர்பாக போக்குவரத்து துறை அமைச்சர் தெரிவிக்கையில், பஞ்சப்பட்டி ஏரிக்கு நீர் கொண்டு வரப்பட்டால் விவசாய தேவைக்கு நீர் கிடைப்பதோடு, குடிநீருக்கும் பயன் படுத்தி கொள்ள முடியும். இது தொடர்பாக கோரிக்கை வைத்த விவசாயிகளை நேரில் அழைத்துச்சென்று தமிழக முதல்-அமைச்சரை சந்தித்து, அவர்களிடம் கோரிக்கை வைத்து விரைவில் பஞ்சப்பட்டி ஏரிக்கு நீர் கொண்டு வருவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.

பொதுமக்களின் நலன் கருதி சர்க்கரை குடும்ப அட்டைகளை அரிசி குடும்ப அட்டைகளாக மாற்றிக்கொள்ளலாம் என்று அரசு அறிவித்தது. கரூர் மாவட்டத்தில் மொத்தம் 12,800 நபர்கள் விண்ணப்பித்துள்ளனர். ரூ.1,000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசு வழங்கும் திட்டம் சென்னையில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. விரைவில் கரூர் மாவட்டத்தில் பொங்கல் பரிசுதொகுப்பு வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story