பட்டீஸ்வரத்தில் மடிக்கணினி வழங்கக்கோரி மாணவர்கள் சாலை மறியல்


பட்டீஸ்வரத்தில் மடிக்கணினி வழங்கக்கோரி மாணவர்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 2 Dec 2019 10:45 PM GMT (Updated: 2 Dec 2019 7:03 PM GMT)

பட்டீஸ்வரத்தில் மடிக்கணினி வழங்கக்கோரி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கும்பகோணம்,

அரசு மற்றும் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகளில் 2017-2018, 2018-2019-ம் கல்வி ஆண்டுகளில் பிளஸ்-2 படித்து முடித்த மாணவ, மாணவிகளுக்கு அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கப்படவில்லை. ஆனால் நடப்பு 2019-2020-ம் கல்வி ஆண்டில் பிளஸ்-2 படிக்கும் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்பட்டு வருகிறது.எனவே கடந்த 2 கல்வி ஆண்டுகளில் பிளஸ்-2 படித்தவர்களுக்கு உடனடியாக மடிக்கணினி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கும்பகோணம் அருகே பட்டீஸ்வரம் அரசு மேல்நிலைப்பள்ளி முன்பு மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் அங்கு சென்று மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் சாலை மறியல் கைவிடப்பட்டது. முன்னதாக கோரிக்கையை வலியுறுத்தி கும்பகோணம் கல்வி மாவட்ட அதிகாரி பாப்பம்மாளிடம் மாணவர்கள் மனு அளித்தனர். மறியல் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஆர்ப்பாட்டம்

அதேபோல மடிக்கணினி வழங்க வேண்டும். 5-ம் வகுப்பு மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கும்பகோணம் கல்வி மாவட்ட அலுவலகம் முன்பாக இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்துக்கு மாணவர் சங்க நகர செயலாளர் பிரபாகரன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் அரவிந்தசாமி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Next Story