கார்த்திகை தீபத்தையொட்டி கோவில்களில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது


கார்த்திகை தீபத்தையொட்டி கோவில்களில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது
x
தினத்தந்தி 11 Dec 2019 10:30 PM GMT (Updated: 11 Dec 2019 7:03 PM GMT)

கார்த்திகை தீபத்தையொட்டி கோவில்களில் ெசாக்கப்பனை கொளுத்தப்பட்டது.

பெரம்பலூர்,

பெரம்பலூரில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீஅகிலாண்டேசுவரி உடனுறை பிரம்மபுரீசுவரர் கோவிலில் கார்த்திகை தீபத்தை ஒட்டி 9-ந்தேதி பரணி தீபமும், நேற்றுமுன்தினம் கார்த்திகை மகாதீபமும் ஏற்றப்பட்டு சிறப்பு வழிபாடு நடந்தது.இதனையொட்டி நேற்று இரவு பவுர்ணமி தீபம் ஏற்றப்பட்டு சொக்கப்பனை (சொடல்) கொளுத்தப்பட்டது. இதில் பிரதோஷ வழிபாட்டு குழுவினர், சிவத்தொண்டர்கள் திரளான பேர் கலந்துகொண்டனர். பூஜைகளை திருச்செங்கோடு சுவாமிநாத சிவாச்சாரியார் மற்றும் கோவில் அர்ச்சகர்கள் நடத்தி வைத்தனர்.

மதனகோபாலசுவாமி கோவில்

இதேபோல மதனகோபால சுவாமி கோவிலில் கார்த்திகை தீபத்தையொட்டி. நேற்று இரவு மதனகோபாலசுவாமி மற்றும் ஸ்ரீதேவி பூதேவி தாயார் உற்சவ சிலைகள் வண்ணமலர்களால் அலங்கரிக்கப்பட்டு பல்லக்கில் திருவீதி உலாவாக சஞ்சீராயர் கோவில் முன்பு எடுத்து செல்லப்பட்டது.

அங்கு மதனகோபாலசுவாமி பல்லக்கு முன்பு சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. இதனைத்தொடர்ந்து பெருமாள் கோவிலுக்கு மீண்டும் எடுத்துவரப்பட்டு சிறப்பு வழிபாடு நடந்தது.. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அலுவலர் மணி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

திருமானூர்

அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட திருமழபாடி கிராமத்தில் சுந்தராம்பிகை உடனாய வைத்தியநாத சாமி கோவிலில் கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு நேற்று கோவிலின் முன்பு மகா தீபம் ஏற்றப்பட்டு சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. இதனையடுத்து முருகன், வள்ளி, தெய்வானை மற்றும் சோமஸ்கந்தர், சுந்தராம்பிகை,பாலம்பிகை ஆகிய தெய்வங்கள் கோவிலில் இருந்து புறப்பட்டு ஊரின் முக்கிய தெருக்கள் வழியாக வீதி உலா வந்தன.

இதேபோல் திருமானூர் கைலாசநாதர் கோவில், கீழப்பழுவூர் ஆலந்துறையார் சிவன் கோவில் மற்றும் திருமானூர் ஒன்றியத்திலுள்ள அனைத்து கிராமங்களில் உள்ள முருகன், விநாயகர் மற்றும் அம்மன் கோவில்களில் கார்த்திகை தீபத்திருநாள் சொக்கப்பனை கொளுத்தப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது.

Next Story