இரட்டை கொலை வழக்கு: முக்கிய குற்றவாளி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


இரட்டை கொலை வழக்கு: முக்கிய குற்றவாளி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x
தினத்தந்தி 17 Dec 2019 10:30 PM GMT (Updated: 17 Dec 2019 7:51 PM GMT)

இரட்டை கொலை வழக்கில் கைதான முக்கிய குற்றவாளி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

தஞ்சாவூர்,

தஞ்சை புதிய வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் வசித்து வந்தவர் வனிதா(வயது42). இவர் தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வந்தார். வனிதாவுக்கும், தஞ்சை மாவட்டம் திருவையாறை அடுத்த திருவேதிக்குடியை சேர்ந்த கனகராஜ் (35) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, இருவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.

வனிதா தனது சகோதரி மகனான பள்ளியக்கிரஹாரம் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த பிரகா‌ஷிடம் ரூ.2 லட்சம் கடன் வாங்கியிருந்தார். இந்த கடனை திருப்பி கொடுக்காததால் கடந்த மாதம் 26-ந் தேதி வனிதாவையும், கனகராஜையும் பிரகா‌‌ஷ், அவரது நண்பர் சூர்யா(20) உள்ளிட்டோர் சேர்ந்து அரிவாளால் வெட்டி கொலை செய்தனர்.

இந்த வழக்கில் தஞ்சை மருத்துவக்கல்லூரி போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரகா‌‌ஷ், சூர்யா உள்பட 4 பேரை கைது செய்தனர். இவர்கள் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சூர்யா மீது ஏற்கனவே குண்டர் பாய்ந்தது. இந்தநிலையில் பிரகா‌‌ஷ் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன் பரிந்துரையின்பேரில் மருத்துவக்கல்லூரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகதீஸ்வரன் வழக்கு ஆவணங்களை கலெக்டரிடம் தாக்கல் செய்தார்.

இந்த ஆவணங்களை கலெக்டர் கோவிந்தராவ் பரிசீலனை செய்து பிரகா‌‌ஷ் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார். அதன்படி முக்கிய குற்றவாளியான பிரகா‌‌ஷ் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. இதற்கான ஆவணங்கள திருச்சி் மத்திய சிறை அதிகாரிகளிடம் போலீசார் வழங்கினர்.

Next Story