மது குடிக்காதே என்று அறிவுரை கூறிய முதியவரை கட்டையால் அடித்து கொன்ற வாலிபர்


மது குடிக்காதே என்று அறிவுரை கூறிய முதியவரை கட்டையால் அடித்து கொன்ற வாலிபர்
x
தினத்தந்தி 18 Dec 2019 10:15 PM GMT (Updated: 18 Dec 2019 2:59 PM GMT)

தேனியில் மதுகுடிக்காதே என்று அறிவுரை கூறிய முதியவரை உருட்டுக் கட்டையால் அடித்து கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

தேனி,

தேனி சமதர்மபுரம் முத்துமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பெத்தனசாமி (வயது 80). இவருடைய மனைவி சின்னத்தாய் (75). இவர்களுக்கு ஒரு மகனும், 3 மகள்களும் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகிவிட்டது. பெத்தனசாமி வசித்து வந்த வீடு சிறியதாக இருந்ததால், அதே பகுதியை சேர்ந்த சிவகண்ணாமூர்த்தி என்பவருடைய வீட்டின் மாடியில் உள்ள அறையை வாடகைக்கு பேசி, பெத்தனசாமி தங்கியிருந்தார்.

அந்த வீட்டின் உரிமையாளரான சிவகண்ணா மூர்த்தியின் தம்பி கனகவேல் அய்யப்பன் (30). கூலித்தொழிலாளி. இவரும், பெத்தனசாமியுடன் அதே அறையில் வசித்து வந்தார். அவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. கனகவேல் அய்யப்பனுக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. இதனால் அடிக்கடி மது அருந்திவிட்டு அவர் போதையில் வீட்டிற்கு வந்துள்ளார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை பெத்தனசாமி, மதுகுடிக்காதே என்றும் போதை பழக்கத்தை கைவிட்டு திருமணம் செய்து கொள்ளுமாறு கனகவேல் அய்யப்பனுக்கு அறிவுரை கூறியுள்ளார். ஆனால், அவர் அதை ஏற்றுக்கொள்ளாமல் பெத்தனசாமியிடம் வாக்குவாதம் செய்ததாக கூறப்படுகிறது.

இதற்கிடையே அன்றைய தினம் இரவில் பெத்தனசாமி வாடகை வீட்டின் அறையில் தூங்கிக் கொண்டிருந்தார். நள்ளிரவில் கனகவேல் அய்யப்பன் மதுபோதையில் அங்கு வந்தார். அப்போது அயர்ந்து தூங்கிக்கொண்டு இருந்த பெத்தனசாமியை எழுப்பி தகராறு செய்துள்ளார். மேலும் அருகில் கிடந்த உருட்டுக்கட்டையை எடுத்து பெத்தனசாமியை, கனகவேல் அய்யப்பன் சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார்.

ஆனால், கனகவேல் அய்யப்பன் போதையில் அங்கேயே படுத்து தூங்கியதாக கூறப்படுகிறது. அதிகாலையில் எழுந்து பார்த்தபோது, ரத்தவெள்ளத்தில் பெத்தனசாமி மயங்கி கிடந்ததை பார்த்த அவர் சத்தம் போட்டுள்ளார். இதனால், அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அங்கு ஓடி வந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் தேனி போலீசாரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். உடனே அவர்கள், உயிருக்கு போராடிய பெத்தனசாமியை மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் இறந்துபோனார்.

இந்த சம்பவம் குறித்து பெத்தனசாமியின் மகள் வசந்தா, தேனி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து கனகவேல் அய்யப்பனை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story