சுடுகாடு ஆக்கிரமிப்பை கண்டித்து பள்ளியை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம்


சுடுகாடு ஆக்கிரமிப்பை கண்டித்து பள்ளியை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம்
x
தினத்தந்தி 23 Dec 2019 11:00 PM GMT (Updated: 23 Dec 2019 7:18 PM GMT)

சுடுகாடு ஆக்கிரமிப்பை கண்டித்து பள்ளியை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குத்தாலம்,

நாகை மாவட்டம், மயிலாடுதுறை அருகே கங்கணம்புத்தூர் ஊராட்சியில் துணை மின்நிலையம் அருகே சுடுகாடு உள்ளது. இதன் அருகே கணபதி ஆற்றில் பாலம் கட்டி சாலை அமைப்பதற்காக அங்கு ஒரு பகுதியை சுத்தம் செய்து சாலை அமைத்துள்ளனர். அதற்காக அந்த பகுதி பொதுமக்கள் சுடுகாட்டு இடத்தையும் வழங்கி உள்ளனர்.

இந்தநிலையில் அங்கு உள்ள நஸ்ருல் முஸ்லிமின் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் ஒரு விழாவிற்கான ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அந்த விழாவிற்கு வரும் கார் உள்ளிட்ட அனைத்து வாகனங்களை நிறுத்துவதற்காக அருகில் உள்ள சுடுகாட்டு பகுதியை பொக்லின் எந்திரம் மூலம் சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது.

போராட்டம்

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கங்கணம்புத்தூர் கிராமத்தை சேர்ந்த வைரத்தம்மாள் என்பவர் இறந்து விட்டார். அவரது உடலை அந்த சுடுகாட்டில் வைத்து எரியூட்டியுள்ளனர். அதன்பின்னர் இறந்தவரின் குடும்பத்தினர் நேற்று பால் தெளிக்க சென்றபோது வைரத்தம்மாள் உடல் எரியூட்டப்பட்ட இடத்தை தவிர்த்து, ஏற்கனவே இறந்தவர்களின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்ட பகுதி முழுவதும் பொக்லின் எந்திரம் மூலம் சுத்தம் செய்து வாகனங்கள் நிறுத்துவதற்கு ஏற்ப சமநிலை படுத்தி இடத்தை ஆக்கிரமித்து இருப்பதை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே இதனை கண்டித்து அந்தபகுதி பொதுமக்கள் நேற்று விழா நடத்தி வரும் அந்த தனியார் பள்ளியை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த மயிலாடுதுறை துணை தாசில்தார் வைத்தியநாதன், வருவாய் ஆய்வாளர் ராஜ், போலீஸ் இன்ஸ்பெக்டர் சிங்காரவேலு மற்றும் போலீசார் மேற்கண்ட இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்களிடம் சுடுகாட்டு இடத்தில் இருக்கும் ஆக்கிரமிப்பை அகற்றி, அந்த பகுதியை அளந்து எல்லை கல் நட்டு கொடுக்கப்படும் என வருவாய்த்துறையினர் உறுதி அளித்தனர்.

பின்னர் பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story