இந்து தலைவர்களை கொல்ல சதித்திட்டம்: குமரியில் தலைமறைவு குற்றவாளிகள் வீட்டில் போலீசார் திடீர் சோதனை


இந்து தலைவர்களை கொல்ல சதித்திட்டம்: குமரியில் தலைமறைவு குற்றவாளிகள் வீட்டில் போலீசார் திடீர் சோதனை
x
தினத்தந்தி 23 Dec 2019 10:15 PM GMT (Updated: 23 Dec 2019 8:24 PM GMT)

இந்து இயக்க தலைவர்களை கொல்ல சதித்திட்டம் தீட்டியது தொடர்பாக குமரி மாவட்டத்தில் தலைமறைவு குற்றவாளிகள் 2 பேருடைய வீட்டில் சிறப்பு புலனாய்வுப்பிரிவு போலீசார் திடீர் சோதனை நடத்தினர். அப்போது லேப்-டாப் மற்றும் செல்போன் சிக்கியது.

நாகர்கோவில்,

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நடைபெற்ற போராட்டங்களை பயன்படுத்தி இந்து இயக்க தலைவர்களை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டப்பட்டதாக உளவுப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல்கள் வந்தன. இதைத் தொடர்ந்து தமிழகம் உள்பட நாடு முழுவதும் இந்து இயக்க தலைவர்களுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. அவர்களது வீடுகளுக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இதனையடுத்து தலைமறைவாக உள்ள 4 முக்கிய குற்றவாளிகளின் பட்டியலை போலீசார் வெளியிட்டனர். அதில் குமரி மாவட்டம் நாகர்கோவில் இளங்கடை மாலிக்தினார் நகரை சேர்ந்த செய்யது அலி (25), திருவிதாங்கோட்டை சேர்ந்த அப்துல் சமீம் (வயது 25) ஆகிய 2 பேர் இடம் பெற்றிருந்தனர். இவர்கள் மீது ஏற்கனவே இந்து இயக்க தலைவர்களை கொல்ல சதித்திட்டம் தீட்டியதாக வழக்குகள் உள்ளன. இதுதொடர்பாக கோர்ட்டிலும் வழக்கு விசாரணை நடந்து வருகிறது.

சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார்

இந்த நிலையில் அப்துல் சமீம், செய்யது அலி கோர்ட்டில் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் 2 மாதங்களாக தலைமறைவாக இருக்கிறார்கள். எனவே இவர்கள் இந்து இயக்க தலைவர்களை கொல்ல சதித்திட்டம் தீட்டியிருக்கலாம் என்று போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. மேலும் இதுகுறித்து உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையே சேலம் அருகே ஒரு வாகனத்தில் சந்தேகப்படும் படியாக 4 பேர் சென்றதாக உளவுப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். மேலும் தலைமறைவாக உள்ள குற்றவாளிகளின் வீட்டையும் சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் கண்காணித்து வந்தனர்.

லேப்-டாப், செல்போன் சிக்கியது

இந்த நிலையில் நெல்லை மாவட்ட சிறப்பு புலனாய்வுப்பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு சுப்பையா தலைமையில் போலீசார் நேற்று அதிகாலை குமரி மாவட்டம் வந்தனர். பின்னர் நாகர்கோவில் மாலிக்தினார் நகரில் உள்ள செய்யது அலி வீட்டுக்கு சென்று திடீர் சோதனை நடத்தினர். ஆனால் அங்கு எந்த விதமான தகவல்களும் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனையடுத்து செய்யது அலிக்கு நெருங்கிய நண்பர் ஒருவரின் வீட்டிலும், அவருடைய மனைவி வீட்டிலும் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. நண்பரின் மனைவி வீட்டில் நடத்திய சோதனையின் போது ஒரு ரகசிய லேப்-டாப்பும், ஒரு செல்போனும் சிக்கியுள்ளது.

இதனை சிறப்பு புலனாய்வுப்பிரிவு போலீசார் கைப்பற்றினர். அதன்பிறகு திருவிதாங்கோட்டில் உள்ள அப்துல் சமீம் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து சிறப்பு புலனாய்வுப்பிரிவு போலீசார் நெல்லை மாவட்டத்துக்கு புறப்பட்டு சென்றனர்.

முயற்சிகள் தீவிரம்

இந்து இயக்க தலைவர்களை கொல்ல சதித்திட்டம் தீட்டியது தொடர்பாக தேடப்பட்டு வரும் செய்யது அலி வீட்டில் சோதனை நடத்திய சில நிமிடங்களிலேயே அவருடைய நெருங்கிய நண்பரின் வீட்டில் சிறப்பு புலனாய்வுப்பிரிவு போலீசார் சோதனை நடத்தினர். எனவே சதித்திட்டம் தீட்டியதில் செய்யது அலியின் நண்பருக்கும் தொடர்பு இருக்கலாம்? என்று சந்தேகிக்கப்படுகிறது.

சிறப்பு புலனாய்வுப்பிரிவு போலீசாரிடம் சிக்கிய லேப்-டாப்பில் உள்ள தகவல்களை பரிசோதிக்கவும், செல்போனில் இருந்து யார் யாரிடம் பேசப்பட்டது? என்பதை கண்டறியும் முயற்சிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு உள்ளன. இந்த தகவல்கள் கிடைத்த பிறகு தான் சதித்திட்டம் தீட்டியது யார்? யாரை கொல்ல முயற்சி நடந்தது? என்ற விவரங்கள் தெரிய வரும்.

பரபரப்பு

சிறப்பு புலனாய்வுப்பிரிவு போலீசார் சோதனையையொட்டி இளங்கடை பகுதியில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story