குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி சேலத்தில், முஸ்லிம் அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டம்


குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி சேலத்தில், முஸ்லிம் அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 24 Dec 2019 11:00 PM GMT (Updated: 24 Dec 2019 5:18 PM GMT)

குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி சேலத்தில் முஸ்லிம் அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சேலம்,

மத்திய பா.ஜனதா அரசு குடியுரிமை திருத்த சட்டத்தை கொண்டு வந்துள்ளது. இந்த சட்ட திருத்ததால் முஸ்லிம்கள், இலங்கை தமிழர்கள் பாதிக்கப்படுவதாக கூறி பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்பினர் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் நேற்று சேலம் டவுன் போலீஸ் நிலையம் அருகே சேலம் மாவட்ட ஐக்கிய ஜமாஅத், ஜமாஅத்துல் உலமா சபை, இமாம்கள் பேரவை ஆகிய முஸ்லிம் அமைப்புகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதற்கு ஐக்கிய ஜமாஅத் கூட்டமைப்பின் தலைவர் முத்தவல்லி எஸ்.ஆர்.அன்வர் தலைமை தாங்கினார். ஐக்கிய ஜமாஅத், ஜமாஅத்துல் உலமா சபை, இமாம்கள் பேரவை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்டம் முழுவதிலும் இருந்து பல்வேறு முஸ்லிம் அமைப்பினரும் கலந்து கொண்டனர். திருவள்ளுவர் சிலை பகுதியில் இருந்து அக்ரஹாரம் கன்னிகா பரமேஸ்வரி கோவில் வரையிலும், பழைய பஸ்நிலையம் நிலைய சாலையிலும் ஆயிரக்கணக்கானோர் திரண்டு இருந்தனர்.

தேசிய கொடி

இதைத்தொடர்ந்து மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய பதிவேடுகள் ஆகியவற்றை திரும்ப பெறக்கோரி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கண்டன கோ‌‌ஷங்களை எழுப்பினர். மேலும் பா.ஜனதா அரசு மற்றும் அ.தி.மு.க. அரசை கண்டித்தும் கோ‌‌ஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் கலந்து கொண்டவர்களில் பலர் தேசிய கொடியை கையில் ஏந்தியபடியும், முகங்களில் தேசிய கொடியை வரைந்தும் இருந்தனர். மேலும் அந்த பகுதியில் உள்ள கட்டிடங்களில் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏறி நின்றனர். இதனிடையே ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற தலைவர்கள் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறவலியுறுத்தி பேசினர்.

இந்த ஆா்ப்பாட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., எஸ்.ஆர். பார்த்திபன் எம்.பி., காங்கிரஸ் மாநகர் மாவட்ட தலைவர் ஜெயபிரகா‌‌ஷ், பெரியார் திராவிட கழக செயலாளர் கொளத்தூர் மணி மற்றும் ம.தி.மு.க. நிர்வாகிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் பல்வேறு அரசியல் கட்சிகள், அரசியல் அமைப்பினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கடைகள் அடைப்பு

இதையொட்டி சேலம் மாநகரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. மாநகர போலீஸ் கமி‌‌ஷனர் செந்தில்குமார் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது ஹெலி கேமரா மூலம் கண்காணிப்பும் செய்யப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆர்ப்பாட்டம் நகரின் முக்கிய பகுதியில் நடந்ததால், மாநகரில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டது. இதேபோல் பழைய பஸ் நிலைய பகுதி, கோட்டை, முதல் அக்ரஹாரம் உள்ளிட்ட பகுதிகளில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. காலை 10.30 மணியளவில் தொடங்கிய இந்த ஆர்ப்பாட்டம் மதியம் 1.30 மணியளவில் முடிவடைந்தது. 3 மணி நேரம் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தால் பெரும் பரபரப்பு நிலவியது.


Next Story