சிறுமியை பலாத்காரம் செய்து கொல்ல முயன்ற தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை - தேனி மகளிர் கோர்ட்டு தீர்ப்பு


சிறுமியை பலாத்காரம் செய்து கொல்ல முயன்ற தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை - தேனி மகளிர் கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 26 Dec 2019 11:00 PM GMT (Updated: 26 Dec 2019 7:03 PM GMT)

சிறுமியை பலாத்காரம் செய்து கொலை செய்ய முயன்ற சம்பவத்தில் கைது செய்யப்பட்ட தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து தேனி மகளிர் கோர்ட்டு தீர்ப்பளித்தது.

தேனி,

தேனி மாவட்டம், பெரியகுளம் கீழவடகரை தெய்வேந்திரபுரத்தை சேர்ந்தவர் காமாட்சி. இவரது மகன் நாகராஜ் (வயது 24). கூலித்தொழிலாளி. இவர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 25-ந்தேதி 5 வயது சிறுமியை கடத்திச் சென்றார். பின்னர் அந்த சிறுமியை ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடத்துக்கு தூக்கிச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தார். பின்னர் இந்த விஷயம் வெளியே தெரிந்தால் தனக்கு ஆபத்து என எண்ணிய நாகராஜ், அந்த சிறுமியை தாக்கி கொலை செய்ய முயன்றார். அப்போது அந்த சிறுமி வலியால் அபய குரல் எழுப்பினார். இதனால் நாகராஜ் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டார்.

பின்னர் அந்த சிறுமி இதுகுறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்தார். சிறுமியின் பெற்றோர் தரப்பில் பெரியகுளம் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் சிறுமியை கடத்திச் சென்றது, கொலை முயற்சி மற்றும் போக்சோ சட்டம் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து நாகராஜை கைது செய்தனர்.

இந்த வழக்கு தேனி மாவட்ட மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. அரசு தரப்பில் அரசு வக்கீல் ராஜராஜேஸ்வரி ஆஜராகி வாதாடினார். இந்த வழக்கில் இறுதி விசாரணை முடிந்ததை தொடர்ந்து நீதிபதி கீதா நேற்று தீர்ப்பு கூறினார்.

நாகராஜுக்கு சிறுமியை கடத்திச் சென்ற குற்றத்துக்கு 10 ஆண்டு சிறை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதமும், அபராதத்தை கட்டத் தவறினால் மேலும் 2 ஆண்டு சிறை தண்டனையும், கொலை செய்ய முயன்ற குற்றத்துக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதமும், அபராதத்தை கட்டத் தவறினால் மேலும் 2 ஆண்டு சிறை தண்டனையும், போக்சோ சட்டத்தின் கீழ் ஆயுள் தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதமும், அபராதத்தை கட்டத் தவறினால் மேலும் 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். இந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று நீதிபதி தனது தீர்ப்பில் கூறியுள்ளார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.

இதையடுத்து தண்டனை விதிக்கப்பட்ட நாகராஜை போலீசார் பாதுகாப்புடன் அழைத்துச் சென்று மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

Next Story