திருவாரூர் மாவட்டத்தில் 2-வது கட்ட உள்ளாட்சி தேர்தலில் விறு, விறுப்பான வாக்குப்பதிவு


திருவாரூர் மாவட்டத்தில் 2-வது கட்ட உள்ளாட்சி தேர்தலில் விறு, விறுப்பான வாக்குப்பதிவு
x
தினத்தந்தி 30 Dec 2019 11:00 PM GMT (Updated: 30 Dec 2019 8:08 PM GMT)

திருவாரூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி 2-வது கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நேற்று நடந்தது. இதில் பெண்கள் அதிக ஆர்வத்துடன் வாக்களித்தனர்.

திருவாரூர்,

திருவாரூர் மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் 10 ஒன்றியங்களுக்கு 2 கட்டமாக நடைபெற்றது. இந்த தேர்தலில் 3,458 பதவிகளுக்கு நேரடியாக தேர்தல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. முதல் கட்டமாக திருவாரூர், மன்னார்குடி, கோட்டூர், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை ஆகிய 5 ஊராட்சி ஒன்றியங்களுக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் 1,642 பதவிகளுக்கு 5,225 பேர் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் 76.93 சதவீதம் வாக்குப்பதிவானது. இதனை தொடர்ந்து நேற்று 2-வது கட்டமாக நன்னிலம், குடவாசல், கொரடாச்சேரி, வலங்கைமான், நீடாமங்கலம் ஆகிய 5 ஒன்றியங்களில் தேர்தல் நடந்தது.

இதில் தேர்தலில் 1,816 பதவிகளுக்கு 5,578 பேர் போட்டியிட்டனர். இதில் நன்னிலம்-186, குடவாசல்-191, கொரடாச்சேரி-184, வலங்கைமான்-180, நீடாமங்கலம்-192 என மொத்தம் 933 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 72 பதற்றமான வாக்குச்சாவடி என கண்டறியப்பட்டு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டது.

பெண்கள் ஆர்வம்

இந்த தேர்தலில் 5 ஒன்றியங்களில் 5,956 வாக்குச்சாவடி அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபட்டனர். வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. வாக்காளர்கள் அதிகமாக பூத் சிலிப்புடன் வந்து வாக்களித்தனர். தேர்தல் ஆணையம் வாக்காளர்கள் தங்களது வாக்குப்பதிவு செய்திட 11 புகைப்படத்துடன் கூடிய ஆவணங்களுக்கு அனுமதி அளித்து இருந்தது. வாக்குப்பதிவு அலுவலர்கள் வாக்காளர்களின் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை சரிபார்த்து, அவர்களின் கைகளில் கருப்பு மையினால் அடையாளம் வைத்தனர்.

இதனையடுத்து வாக்காளர்கள் மாவட்ட ஊராட்சி, ஒன்றியக்குழு உறுப்பினர், கிராம ஊராட்சி மன்ற தலைவர், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் என 4 வாக்குச்சீட்டுகளை பயன்படுத்தி தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். பிறகு வாக்குச்சீட்டுகளை மடித்து வாக்கு பெட்டிகளில் போட்டனர். இந்த தேர்தலில் ஆண்களை விட பெண்கள் அதிக ஆர்வத்துடன் வாக்களித்தனர்.

1,675 போலீசார் பாதுகாப்பு

காலை 9 மணிக்கு 14.44 சதவீதமும், 11 மணிக்கு 36.70 சதவீதமும், மதியம் 1 மணிக்கு 56.89 சதவீதமும், மாலை 3 மணிக்கு 68.54 சதவீதமும் என வாக்குகள் பதிவானது. இந்த தேர்தலுக்கான வாக்குப்பதிவு 5 மணியுடன் நிறைவுபெற்றது. தேர்தல் வாக்குப்பதிவினை மாவட்ட கலெக்டரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான ஆனந்த் அனைத்து வாக்குச்சாவடிகளுக்கு நேரில் சென்று பார்வையிட்டார். வாக்குச்சாவடிகளில் 1,675 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். போலீஸ் சூப்பிரண்டு துரை வாக்குச்சாவடி மையங்களில் பாதுகாப்பு வசதியை ஆய்வு செய்தார்.


Next Story