8 கிலோ தங்க நகை கொள்ளை: அடகு கடை உரிமையாளர், மகனிடம் போலீசார் தீவிர விசாரணை


8 கிலோ தங்க நகை கொள்ளை: அடகு கடை உரிமையாளர், மகனிடம் போலீசார் தீவிர விசாரணை
x
தினத்தந்தி 4 Jan 2020 10:15 PM GMT (Updated: 4 Jan 2020 10:21 PM GMT)

புதுவையில் 8 கிலோ தங்க நகை கொள்ளை போன அடகு கடை உரிமையாளர் மற்றும் அவரது மகனிடம் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

புதுச்சேரி,

புதுச்சேரி 45 அடி ரோடு பகுதியை சேர்ந்தவர் ராகேஷ் குமார் ஜெயின்(வயது 51). இவர் திலாஸ்பேட்டை அய்யனார் கோவில் வீதியில் கடந்த 30 ஆண்டுகளாக நகை அடகு கடை நடத்தி வருகிறார். அவரது மகன் சுரப் ஜெயின் உதவியாக இருந்து வருகிறார்.

கடந்த 2-ந் தேதி இரவு 8 மணியளவில் அவர்கள் 2 பேரும் வியாபாரத்தை முடித்து கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றனர். மறுநாள் காலை வந்து பார்த்த போது கடையில் உள்ள 3 கதவுகள் மற்றும் லாக்கரில் இருந்த பூட்டுகள் திறந்து கிடந்தன. லாக்கரில் வைக்கப்பட்டு இருந்த ரூ.2½ கோடி மதிப்புள்ள 8 கிலோ நகைகள் மற்றும் ரூ.2 லட்சத்து 80 ஆயிரம் ரொக்க பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. அந்த கடையில் உள்ள கண்காணிப்பு கேமராவில் இருந்த ‘ஹார்டு டிஸ்க்’கும் திருடப்பட்டு இருந்தது.

நாடகமா?

இது குறித்து ராகேஷ் குமார் ஜெயின் கோரிமேடு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர் இனியன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் அங்கு பதிவாகி இருந்த தடயங்களை பதிவு செய்தனர். அந்த பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி உள்ள காட்சிகளை வைத்து குற்றவாளிகளை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டனர். அதில் எந்த துப்பும் கிடைக்கவில்லை.

அடகு கடையில் 3 கதவுகள் மற்றும் ஒரு லாக்கரில் மொத்தம் 14 பூட்டுகள் உள்ளன. இவை அனைத்தும் நவீன பூட்டுகள். இதனை கள்ளச்சாவியை பயன்படுத்தி திறப்பது என்பது இயலாத காரியமாக போலீசார் கருதுகின்றனர். நகை அடகு கடை உள்ள பகுதி, மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியாகும். எனவே இந்த கொள்ளை சம்பவம் நாடகமாக இருக்கலாமா? என்று போலீசார் கருதுகின்றனர். .

போலி முகவரிகள்

இதையடுத்து நகை அடகு கடையின் உரிமையாளர் ராகேஷ்குமார் ஜெயின் மற்றும் அவரது மகனிடம் கடையின் சாவியை யார்? யார்? பயன்படுத்துவார்கள் என்பது உள்பட பல்வேறு கேள்விகளை கேட்டு போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

நகை அடகு வைத்தவர்களின் கணக்கு எழுதப்பட்ட நோட்டை கைப்பற்றி போலீசார் விசாரித்தனர். அதில் ஒரு சில முகவரிகள் போலியாக இருப்பது தெரிய வந்துள்ளது. இது போலீசாருக்கு பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக முழுமையாக விசாரிக்கப்பட்ட பிறகே ராகேஷ் குமார் ஜெயினின் அடகு கடையில் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது உண்மையா? அல்லது நாடகமா? என்பது வெளிச்சத்துக்கு வரும்.


Next Story