சப்-இன்ஸ்பெக்டர் கொலை தொடர்பாக 50 பேரிடம் விசாரணை: பயங்கரவாதிகளை விரைவில் கைது செய்வோம் தென்மண்டல போலீஸ் ஐ.ஜி. பேட்டி


சப்-இன்ஸ்பெக்டர் கொலை தொடர்பாக 50 பேரிடம் விசாரணை: பயங்கரவாதிகளை விரைவில் கைது செய்வோம் தென்மண்டல போலீஸ் ஐ.ஜி. பேட்டி
x
தினத்தந்தி 11 Jan 2020 11:00 PM GMT (Updated: 11 Jan 2020 8:10 PM GMT)

குமரி சோதனை சாவடியில் சப்-இன்ஸ்பெக்டர் கொலை தொடர்பாக 50 பேரிடம் விசாரணை நடந்து வருகிறது. பயங்கரவாதிகளை விரைவில் கைது செய்வோம் என்றும் தென்மண்டல போலீஸ் ஐ.ஜி. சண்முக ராஜேஸ்வரன் கூறினார்.

நாகர்கோவில்,

தமிழக- கேரள எல்லையில் குமரி மாவட்டம் களியக்காவிளை சந்தை ரோட்டில் சோதனைச் சாவடி உள்ளது. இந்த சோதனை சாவடியில் பணியில் இருந்த களியக்காவிளை சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் (வயது 57) கடந்த 8-ந் தேதி பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார். அந்தப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய 2 பேர் இந்த கொலையில் ஈடுபட்டது தெரிய வந்தது.

26-ந் தேதி நடைபெற உள்ள குடியரசு தினவிழாவை சீர்குலைக்க சதித்திட்டம் தீட்டியதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு மத்திய உள்துறை அறிவுறுத்தலின்பேரில் சென்னை மற்றும் பெங்களூருவில் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த சிலரை போலீசார் கைது செய்தனர். அதற்கு பழிவாங்கும் நோக்கத்துடன் குமரி மாவட்டம் திருவிதாங்கோடு, நாகர்கோவில் இளங்கடை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களும், பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடையவர்களுமான அப்துல் சமீம் (32), தவுபிக் (28) ஆகிய 2 பேர்தான் இந்த கொலையை செய்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளதோடு, அவர்கள் மீது களியக்காவிளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சல்லடை போட்டு அலசல்

மேலும் இந்த சம்பவம் பற்றிய தகவல் அறிந்ததும் தமிழக போலீஸ் டி.ஜி.பி. திரிபாதி சென்னையில் இருந்து களியக்காவிளை வந்து நேரில் விசாரணை நடத்தினார். கொலை நடந்த இடத்தையும் பார்வையிட்ட அவர் குற்றவாளிகளை விரைந்து பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டார். இதற்காக அவர் கேரள மாநில போலீஸ் டி.ஜி.பி.யையும் சந்தித்து ஆலோசனை நடத்தினார். மேலும் கூடுதல் டி.ஜி.பி. ஜெயந்த் முரளி, தென்மண்டல ஐ.ஜி. சண்முக ராஜேஸ்வரன், டி.ஐ.ஜி. பிரவீன்குமார் அபிநபு ஆகியோர் குமரி மாவட்டத்தில் முகாமிட்டு பயங்கரவாதிகளை விரைந்து பிடிப்பதற்கான நடவடிக்கைகளை முடுக்கிவிட்டு வருகிறார்கள்.

கொலையாளிகள், வில்சனை கொலை செய்துவிட்டு கேரள மாநில எல்லையில் நிறுத்தி வைத்திருந்த கார் மூலம் கேரளாவுக்கு தப்பிச் சென்றுவிட்டனர். எனவே தமிழக- கேரள மாநில போலீசார் இணைந்து பயங்கரவாதிகளை பிடித்து கைது செய்ய தீவிரம் காட்டி வருகிறார்கள். 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தமிழகம் மற்றும் கேரள பகுதிகளில் சல்லடை போட்டு அலசி பயங்கரவாதிகளை தேடி வருகிறார்கள்.

ரகசிய இடங்களில் விசாரணை

மேலும் பயங்கரவாதிகள் பதுங்கியிருக்கும் இடத்தை அறிவதற்காகவும், அவர்களுக்கும் பயங்கரவாத அமைப்புக்கும் உள்ள ெதாடர்புகளை தெரிந்து கொள்வதற்காகவும் போலீசார் அப்துல் சமீம், தவுபிக் ஆகியோரின் உதவியவர்கள், நண்பர்கள் மற்றும் கேரள மாநிலத்தில் தொடர்பில் இருந்தவர்கள் என பலரையும் பிடித்து போலீஸ் வளையத்துக்குள் கொண்டு வந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

கடந்த சில தினங்களுக்கு முன் நாகர்கோவில், திருவிதாங்கோடு பகுதிகளைச் சேர்ந்த 6 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு குமரி மாவட்டம் மற்றும் கேரள மாநில எல்லைப்பகுதியான இஞ்சிவிளை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோரை குமரி மாவட்டத்தில் ரகசிய இடங்களில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கேரள போலீசார் ஒத்துழைப்பு

இதுதொடர்பாக தென்மண்டல போலீஸ் ஐ.ஜி. சண்முகராஜேஸ்வரனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் கொலை தொடர்பான வழக்கு விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த கொலையில் சம்பந்தப்பட்ட பயங்கரவாதிகளை பிடிக்க 10 தனிப்படை போலீசார் தமிழகம் மற்றும் கேரள மாநில பகுதிகளில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகிறார்கள். வழக்கு விசாரணைக்கு கேரள மாநில போலீசாரும் சிறப்பான முறையில் ஒத்துழைப்பு நல்கி வருகிறார்கள். இந்த வழக்கு தொடர்பாக திருவனந்தபுரம் டி.ஐ.ஜி.யிடம் பேசியிருக்கிறோம். அவரும் தேவையான உதவிகளை செய்து வருகிறார்.

விரைவில் கைது செய்வோம்

தமிழக போலீசாரும், கேரள போலீசாரும் இணைந்து கேரள மாநில பகுதிகளில் திடீர் சோதனை நடத்தி கொலையாளிகளை தேடினோம். அவர்களுடன் தொடர்புடையவர்கள் சிலரையும் பிடித்து வந்து விசாரணை நடத்தி வருகிறோம். அப்துல் சமீமுடன் தொடர்பில் இருந்த கேரள மாநிலம் பகுதியைச் சேர்ந்த எம்.எஸ்.சி. பட்டதாரி ஒருவரிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதேபோல் குமரி மாவட்டத்தில் அப்துல் சமீம், தவுபிக் ஆகியோருக்கு உதவியாக இருந்தவர்கள், நண்பர்கள் என பலரையும் பிடித்து விசாரணை செய்து வருகிறோம். இதுவரை சுமார் 50 பேரை பிடித்து விசாரணை நடத்தியுள்ளோம். இந்த விசாரணையில் பல பயனுள்ள தகவல்கள், அதாவது கொலையாளிகளை நெருங்குவதற்கான தகவல்கள் கிடைத்துள்ளன. கேரளா மட்டுமின்றி கேரளா- கர்நாடகா மாநில எல்லைப்பகுதியிலும் போலீசார் தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். விரைவில் அவர்களை கைது செய்வோம்.

இவ்வாறு ஐ.ஜி. சண்முகராஜேஸ்வரன் கூறினார். 

Next Story