பள்ளிபாளையம் அருகே தொழிலாளி குத்திக்கொலை வாலிபர் போலீசில் சரண்


பள்ளிபாளையம் அருகே தொழிலாளி குத்திக்கொலை வாலிபர் போலீசில் சரண்
x
தினத்தந்தி 16 Jan 2020 10:15 PM GMT (Updated: 16 Jan 2020 8:07 PM GMT)

பள்ளிபாளையம் அருகே தொழிலாளி குத்திக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக வாலிபர் போலீசில் சரண் அடைந்துள்ளார்.

பள்ளிபாளையம்,

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே உள்ள வெப்படையை சேர்ந்தவர் ராஜா. லேத் பட்டறை வேலை செய்து வருகிறார். இவருக்கு 2 மகன்கள். மூத்த மகன் விக்னேஷ் (வயது 19). இவர் என்ஜினீயரிங் படிப்பில் சேர்ந்து பாதியில் படிப்பை விட்டு விட்டு லேத் தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவு நண்பர்களுடன் சினிமாவுக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற விக்னேஷ், இரவு வீடு திரும்பவில்லை. இந்நிலையில் நேற்று காலையில் எலந்தகுட்டை ஆரம்ப சுகாதார நிலையம் அருகில் உடலில் காயங்களுடன் அவர் குத்திக்கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

வாலிபர் சரண்

இதுபற்றி தகவல் அறிந்த பள்ளிபாளையம் போலீசார் அங்கு சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பள்ளிபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு வந்து தடயங்களை சேகரித்து சென்றனர். மோப்பநாய் வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கியது. இந்த கொலை குறித்து பள்ளிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையில் இந்த கொலை தொடர்பாக பள்ளிபாளையம் பகுதியை சேர்ந்த குமார் என்பவரது மகன் விக்னேஷ் (25) என்பவர் சேலம் கன்னங்குறிச்சி போலீசில் சரண் அடைந்தார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story