கூலமேட்டில் ஜல்லிக்கட்டு: அடங்க மறுத்த காளைகளுடன் மல்லுக்கட்டிய வீரர்கள் மாடுகள் முட்டியதில் 15 பேர் காயம்


கூலமேட்டில் ஜல்லிக்கட்டு: அடங்க மறுத்த காளைகளுடன் மல்லுக்கட்டிய வீரர்கள் மாடுகள் முட்டியதில் 15 பேர் காயம்
x
தினத்தந்தி 18 Jan 2020 11:00 PM GMT (Updated: 18 Jan 2020 5:19 PM GMT)

ஆத்தூர் அருகே கூலமேட்டில் நேற்று நடந்த ஜல்லிக்கட்டில் அடங்க மறுத்த காளைகளுடன் வீரர்கள் மல்லுக்கட்டினார்கள். மேலும் மாடுகள் முட்டியதில் 15 பேர் காயம் அடைந்தனர்.

சேலம்,

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கூலமேட்டில் பொங்கல் பண்டிகையையொட்டி ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு நடத்தப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நேற்று கூலமேட்டில் கோலாகலமாக நடந்தது. இதற்காக கூலமேடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மைதானம் தயார் செய்யப்பட்டிருந்தது. சேலம், நாமக்கல், திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர், திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 750-க்கும் மேற்பட்ட காளைகள் போட்டியில் பங்கேற்பதற்காக மாட்டின் உரிமையாளர்கள் கொண்டு வந்து பதிவு செய்தனர்.

அந்த மாடுகளுக்கு நோய் ஏதேனும் உள்ளதா? என்பது குறித்து கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரிகள் அடங்கிய குழுவினர் பரிசோதனை செய்தனர். அந்த பரிசோதனையில், நோய் உள்ளிட்ட சில குறைபாடுகள் காரணமாக ஒருசில காளைகள் ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ள அனுமதி கிடையாது என்றும், இதனால் அந்த காளைகளை தங்களது ஊர்களுக்கு அழைத்து செல்லுமாறும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால் 616 காளைகள் மட்டும் ஜல்லிக்கட்டில் பங்கேற்பதாக விழா குழுவினர் சார்பில் அறிவிக்கப்பட்டது.

317 வீரர்கள்

இதேபோல், மாடுபிடி வீரர்களில் 317 பேர் பதிவு செய்திருந்தனர். அவர்கள் அனைவரையும் மல்லியக்கரை வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ஹரிஹரன் தலைமையிலான குழுவினர் பரிசோதனை செய்தனர்.

ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்கள் கீழே விழுந்து காயம் ஏற்படாத வகையில் மைதானத்தில் தென்னைநார் கழிவுகள் பரப்பப்பட்டும், பார்வையாளர்கள் கூட்டத்துக்குள் காளைகள் சென்று விடாமல் இருக்க பாதுகாப்பு தடுப்பு வேலிகளும் அமைக்கப்பட்டிருந்தன.

முதலில் கோவில் காளை

இதையடுத்து சரியாக காலை 9.30 மணிக்கு மாவட்ட கலெக்டர் ராமன், போலீஸ் சூப்பிரண்டு தீபா கனிக்கர், மாநில தலைமை கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன், சின்னதம்பி எம்.எல்.ஏ. ஆகியோர் தலைமையில் மாடுபிடி வீரர்கள் அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். அதாவது, சுப்ரீம் கோர்ட்டால் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதற்கென அறிவுறுத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றுவேன் எனவும், மாடுகளை துன்புறுத்த மாட்டோம் என்றும் வீரர்கள் உறுதிமொழியை வாசித்தனர். பின்னர், ஜல்லிக்கட்டு விழாவை கலெக்டர் ராமன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

அதைத்தொடர்ந்து வாடிவாசல் வழியாக கோவில் காளை முதலில் அவிழ்த்து விடப்பட்டது. முதலில் வந்த கோவில் காளையை வீரர்கள் யாரும் பிடிக்கவில்லை. பின்னர், மற்ற காளைகள் ஒவ்வொன்றாக வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்டன. அப்போது சீறிப்பாய்ந்து வந்த காளைகளை இளைஞர்கள் அடக்க முயன்றனர். ஆனால் காளைகள் மாடுபிடி வீரர்களின் கையில் சிக்காமல் திமிறிக்கொண்டு ஓடின. சில இளைஞர்கள் காளைகளின் திமிலை பிடித்துக்கொண்டு சற்று தூரம் சென்றனர். மேலும், சில காளைகள் துள்ளிக் குதித்தபடி வீரர்களை முட்டி தள்ளி விட்டு ஆக்ரோ‌‌ஷமாக ஓடியதை காணமுடிந்தது.

மல்லுக்கட்டிய வீரர்கள்

ஒவ்வொரு காளையும் களத்துக்கு வரும்முன், ‘‘ஒலி பெருக்கி மூலம் இந்த காளையை அடக்கினால் தங்ககாசு, வெள்ளிக்காசு, குத்துவிளக்கு, சில்வர் பே‌‌ஷன், செல்போன், சைக்கிள், ரொக்கப்பணம், பாத்திரங்கள் உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்படும்’’ என்றும், ‘‘2-க்கும் மேற்பட்ட வீரர்கள் சேர்ந்து காளைகளை பிடித்தால் அவர்களுக்கு பரிசு கிடையாது’’ என்றும் அறிவிக்கப்பட்டது. பரிசுகளை வெல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் வீரர்கள் காளைகளை அடக்க முயன்றனர். ஆனால் அடங்க மறுத்த காளைகள் சீறிக்கொண்டு ஓடின. அவைகளுடன் வீரர்கள் மல்லுக்கட்டினார்கள்.

இருப்பினும், துள்ளி குதித்த சில காளைகளை, அங்கிருந்த மாடுபிடி வீரர்கள் சிலர் அடக்கியதற்காகவும், வீரர்கள் பிடியில் சிக்காமல் ஓடிய காளைகளின் உரிமையாளர்களுக்கும் சில்வர் பாத்திரங்கள், குக்கர், சைக்கிள், வெள்ளிக்காசு, ரொக்கப்பணம் போன்ற பல்வேறு பரிசுகள் உடனுக்குடன் வழங்கப்பட்டன..

15 பேர் காயம்

இந்த ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டி தள்ளியதில், ஆத்தூர் அருகே கோனேரிப்பட்டியை சேர்ந்த மாடுபிடி வீரர்கள் செல்வமுருகன் (வயது21), ஆணையம்பட்டியை சேர்ந்த கண்ணன் (21), உலிபுரம் வினோத் (29),செந்தாரப்பட்டியை சேர்ந்த ஆனந்த் (26), தம்மம்பட்டி விஜய் (22) உள்பட 15 பேர் காயம் அடைந்தனர். பின்னர், லேசான காயம் அடைந்தவர்களுக்கு அங்கேயே தயார் நிலையில் இருந்த மருத்துவ குழுவினர் முதலுதவி சிகிச்சை அளித்தனர். ஆனால் படுகாயம் அடைந்த வீரர்களை மேல் சிகிச்சைக்காக சேலம் மற்றும் ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரிகளுக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுதவிர, பார்வையாளர்கள் சிலரையும் மாடுகள் முட்டி தள்ளியது. இதில் லேசான காயம் அடைந்தவர்களுக்கு அங்கேயே முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. கூலமேட்டில் நடந்த ஜல்லிக்கட்டு விழாவை சேலம், ஆத்தூர், தம்மம்பட்டி, கெங்கவல்லி, கடம்பூர், நாமக்கல், தர்மபுரி உள்பட பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான பொதுமக்கள் திரண்டு வந்து ரசித்து பார்த்தனர்.

போலீஸ் பாதுகாப்பு

காலை 9.30 மணிக்கு தொடங்கிய இந்த ஜல்லிக்கட்டு மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது. கூலமேடு ஜல்லிக்கட்டில் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருப்பதற்காக போலீஸ் சூப்பிரண்டு தீபா கனிக்கர் தலைமையில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள் உள்பட 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.


Next Story