ராணுவ வீரர் உள்பட 3 பேரை அரிவாளால் வெட்டிய வழக்கில், தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை - தேனி மகளிர் கோர்ட்டு தீர்ப்பு


ராணுவ வீரர் உள்பட 3 பேரை அரிவாளால் வெட்டிய வழக்கில், தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை - தேனி மகளிர் கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 23 Jan 2020 10:30 PM GMT (Updated: 23 Jan 2020 11:43 PM GMT)

முன்னாள் ராணுவ வீரர் மற்றும் அவருடைய மனைவி, தாய் ஆகியோரை அரிவாளால் வெட்டிய தொழிலாளிக்கு தேனி மகளிர் கோர்ட்டில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

தேனி,

தேனி மாவட்டம், கம்பம் அருகே உள்ள கருநாக்கமுத்தன்பட்டி இந்திரா காலனியை சேர்ந்தவர் செல்வம் (வயது 45). முன்னாள் ராணுவ வீரர். இவர் அதே ஊரில் ராணுவத்தில் சேருவதற்கும், போலீஸ் பணியில் சேருவதற்கும் இளைஞர்களுக்கு பயிற்சி அளித்து வந்தார். இவருக்கும், இவருடைய உறவினரான அதே ஊரில் உள்ள அரசமரத்தெருவை சேர்ந்த கூலித்தொழிலாளியான சிவனேசன் (31) என்பவருக்கும் இடையே சொத்து பிரச்சினை தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது.

இந்நிலையில், கடந்த 2014-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 23-ந்தேதி அதிகாலையில் செல்வத்தின் வீட்டுக்குள் சிவனேசன் அத்துமீறி நுழைந்து தகராறு செய்தார். மேலும் தான் எடுத்து வந்த அரிவாளால் செல்வம், அவருடைய மனைவி செல்வி (35), தாய் ஈஸ்வரி (70) ஆகியோரை சிவனேசன் வெட்டினார். இதில் ஈஸ்வரிக்கு பலத்த வெட்டுக்காயங்கள் ஏற்பட்டன.

இந்த சம்பவம் குறித்து கூடலூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் செல்வி புகார் செய்தார். அதன்பேரில், வீட்டுக்குள் அத்துமீறி நுழைதல், கொலை முயற்சி, ஆயுதம் கொண்டு தாக்கி காயம் ஏற்படுத்துதல் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிவனேசனை கைது செய்தனர்.

இந்த வழக்கு தேனி மாவட்ட மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் ராஜராஜேஸ்வரி ஆஜராகி வாதாடினார். வழக்கில் இறுதி விசாரணை முடிந்ததை தொடர்ந்து நீதிபதி கீதா நேற்று தீர்ப்பு கூறினார்.

இதில் ஈஸ்வரியை அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயன்ற குற்றத்துக்கு சிவனேசனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. மேலும், செல்வியையும், செல்வத்தையும் தாக்கிய குற்றத்துக்கு தலா 10 ஆண்டு சிறை தண்டனையும் மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதமும், அபராதத்தை கட்டத் தவறினால் மேலும் 2 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த குற்றத்துக்கு 7 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதமும், அபராதத்தை கட்டத் தவறினால் மேலும் ஒரு ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது.

இந்த தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டு இருந்தார். இதையடுத்து, சிவனேசனை போலீசார் பாதுகாப்பாக அழைத்துச் சென்று மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

இதற்கிடையே இந்த சம்பவம் நடந்த பின்பு, செல்வம் கிராம நிர்வாக அலுவலர் தேர்வு எழுதி வெற்றி பெற்றார். தற்போது அவர் செங்கல்பட்டில் கிராம நிர்வாக அலுவலராக வேலை பார்த்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story