தேசிய நெடுஞ்சாலைத்துறையினரை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்


தேசிய நெடுஞ்சாலைத்துறையினரை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 1 Feb 2020 11:00 PM GMT (Updated: 1 Feb 2020 7:34 PM GMT)

தேசிய நெடுஞ்சாலைத்துறையினரை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கீழப்பழுவூர்,

*அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்தில் திருச்சியில் இருந்து அரியலூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையை விரிவுபடுத்தும் பணி கடந்த ஓராண்டுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. இந்த சாலை அமைக்க தேவைப்படும் மண்ணை வேப்பங்குழி கிராமத்தில் உள்ள உச்சிகுளம் ஏரியிலிருந்து நெடுஞ்சாலை துறையினர் இரண்டாயிரம் லோடுகளுக்கு மேல் எடுத்து விட்டதாக கூறப்படுகிறது. இது அரசின் அனுமதியோடு நடைபெற்று வருகிறது என்று கிராம மக்கள் அமைதியாக இருந்துள்ளனர். ஆனால் இதுகுறித்த விசாரணையில், எந்த அனுமதியும் வாங்காமல் மண்எடுத்துள்ளனர் என கிராம மக்களுக்கு தெரிய வந்ததும் ஆத்திரமடைந்த கிராம மக்கள் ஒன்றிணைந்து வேப்பங்குழி கிராமத்தின் அருகே திருச்சியிலிருந்து அரியலூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே மண் மூட்டைகளை வைத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போக்குவரத்து பாதிப்பு

இதுகுறித்து தகவல் அறிந்த கீழப்பழுவூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் கூடிய விரைவில் கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என போலீசார் உறுதி அளித்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதனால் திருச்சி- அரியலூர் தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

*திருமானூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கீழப்பழுவூரை சேர்ந்தவர் பச்சமுத்து(வயது 70), கொத்தனாரான இவர் நேற்று மாலை அரியலூரில் இருந்து தஞ்சை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் கீழப்பழுவூர் பழைய பஸ் நிலையம் அருகே அவரது சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக கரும்பு லோடு ஏற்றி வந்த டிராக்டர், சைக்கிள் மீது மோதியது. இதில் பச்சமுத்து டிராக்டரின் சக்கரத்தில் சிக்கி பலியானார். இதுகுறித்து கீழப்பழுவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

2 மகள்களுடன் தாய் கடத்தலா?

*தேளூர் மதுரா வடக்கு தெருவை சேர்ந்தவர் அன்பழகன் மனைவி இளவரசி(29). இவர்களுக்குஅருணா(13), ஜனனி(8) என 2 மகள்கள் உள்ளனர். அன்பழகன் திருப்பூரில் கட்டிடதொழிலாளியாக வேலைபார்த்து வருகிறார். இந்த நிலையில் சம்பவத்தன்று குடும்ப தகராறு காரணமாக தனது 2 மகள்களுடன் வீட்டை விட்டு வெளியே சென்ற இளவரசி அதன் பிறகு வீட்டிற்கு வரவில்லை. எங்கு தேடியும் கிடைக்காததால் அன்பழகன் இதுகுறித்து கயர்லாபாத் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இளவரசி மற்றும் அவரது மகள்கள் கடத்தப்பட்டனரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெண் மீட்பு

*ஜெயங்கொண்டம் அருகே உள்ள கல்லாத்தூர் காமிட்டியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சித்ரா. இவரது மகள் தேவி(23). இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது. கடந்த 24-ந் தேதி வீட்டை விட்டு சென்ற தேவி அதன் பிறகு வீட்டிற்கு வரவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் ஜெயங்கொண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேவியை தேடி வந்தனர். இந்த நிலையில் தேவி நேற்று திருச்சி சமயபுரம் அருகில் இருப்பதாக தகவல் வந்தது. இதையடுத்து ஜெயங்கொண்டம் போலீசார் தேவியை அடையாளம் கண்டு பத்திரமாக மீட்டு, அவரது தாயார் சித்ராவிடம் ஒப்படைத்தனர்.

*பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள கீழப்பெரம்பலூர் கிராமத்தை சேர்ந்தவர் விசாலாட்சி(65). இவருக்கு சொந்தமான 14 ஆடுகளை நேற்று முன்தினம் மர்மநபர்கள் திருடி சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில், குன்னம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் மணிகண்டன் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்.

Next Story