அந்தியூர் அருகே வீடு புகுந்து நகை- பணம் திருட்டு; முகமூடி கொள்ளையன் கைவரிசை


அந்தியூர் அருகே வீடு புகுந்து நகை- பணம் திருட்டு; முகமூடி கொள்ளையன் கைவரிசை
x
தினத்தந்தி 16 Feb 2020 11:15 PM GMT (Updated: 16 Feb 2020 5:21 PM GMT)

அந்தியூர் அருகே வீடு புகுந்து நகை மற்றும் பணத்தை முகமூடி கொள்ளையன் திருடி சென்றான்.

அந்தியூர், 

அந்தியூரை அடுத்த வெள்ளித்திருப்பூர் அருகே உள்ள பாப்பாத்திக்காடு பகுதியை சேர்ந்தவர் ஜெயசுதா (வயது 40). நேற்று முன்தினம் இவர் அருகில் உள்ள தோட்டத்தில் சென்று வேலை செய்து கொண்டிருந்தார். வேலை முடிந்ததும் வீட்டுக்கு சென்றார். அப்போது அவர் வீடு திறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் வீட்டுக்குள் செல்ல முற்பட்டார். அப்போது முகமூடி அணிந்த மர்ம நபர் சட்டென்று வீட்டில் இருந்து வெளியே வந்தார். அவனை கண்டதும் ஜெயசுதா சத்தம் போட முயன்றார். உடனே அவன் தன்னிடம் இருந்த கத்தியை காட்டி மிரட்டி சத்தம் போட்டால் குத்திவிடுவேன் என கூறிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டான். இதானல் அவர் பயந்து போனார்.

முகமூடி கொள்ளையன் சென்றதும் வீட்டின் உள்ளே சென்று பார்த்தார். அங்கு பீரோவில் வைக்கப்பட்டிருந்த 2 பவுன் நகை, 3 ஜோடி வெள்ளி கொலுசுகள், ரூ.1,000 ஆகியவற்றை காணவில்லை. முகமூடி கொள்ளையன் திருடி சென்றது தெரியவந்தது.

இதேபோல் பாப்பாத்திக்காடு பகுதியை சேர்ந்த இருளாயி (52) என்பவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அருகில் உள்ள தோட்டத்துக்கு களை எடுக்க ெசன்றார். களை எடுத்துவிட்டு வீட்டுக்கு வந்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது கண்டார். உடனே அவர் வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் வைக்கப்பட்டிருந்த 2 பவுன் நகை மற்றும் ரூ.5 ஆயிரம் ஆகியவற்றை காணவில்லை. யாரோ மர்ம நபர், நகை மற்றும் பணத்தை திருடி சென்றது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில் வெள்ளித்திருப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் 2 பேரின் வீடுகளும் ஒரே பகுதியில் இருப்பதால் ெஜயசுதா வீட்டில் புகுந்த முகமூடி அணிந்த கொள்ளையன்தான் இருளாயி வீட்டிலும் புகுந்து நகை மற்றும் பணத்தை திருடி சென்றிருக்க முடியும் என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அதுமட்டுமின்றி முகமூடி கொள்ளையனை பிடிக்க அந்தியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி தலைமையில் தனிப்படையும் அமைக்கப்பட்டு உள்ளது.

Next Story