சிறுவன் கொலை: கைதான தாய்-கள்ளக்காதலன் ஜெயிலில் அடைப்பு பரபரப்பு வாக்குமூலம்


சிறுவன் கொலை: கைதான தாய்-கள்ளக்காதலன் ஜெயிலில் அடைப்பு பரபரப்பு வாக்குமூலம்
x
தினத்தந்தி 16 March 2020 12:30 AM GMT (Updated: 15 March 2020 10:03 PM GMT)

களியக்காவிளை அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த சிறுவன் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட தாய், கள்ளக்காதலன் ஜெயிலில் அடைக்கப்பட்டனர். மேலும், கைதான தாய் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

களியக்காவிளை,

களியக்காவிளையை அடுத்த மலையடி அல்ல சினாவிளையை சேர்ந்தவர் வசந்தா (வயது 49). இவர் கணவர் மோகனை பிரிந்து வசித்து வந்தார். இவருக்கு 2 மகள்களும், லால் மோகன் (13) என்ற மகனும் இருந்தனர். லால் மோகன் 2016-ம் ஆண்டு மர்மமான முறையில் இறந்தான். சிறுவன் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலை செய்ததாக தாய் வசந்தா களியக்காவிளை போலீசாரிடம் தகவல் தெரிவித்தார்.

இதனையடுத்து போலீசார் தற்கொலை வழக்காக பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்தநிலையில், வசந்தாவின் கணவர் மோகன், தனது மகன் சாவில் மர்மம் இருப்பதாக போலீசில் புகார் கொடுத்தார். இதையடுத்து போலீசார் வசந்தாவை பிடித்து கிடுக்கிபிடி விசாரணை நடத்தினர். அப்போது, வசந்தாவும், அவரது கள்ளக்காதலன் மலையடி இரட்டைகுழிவிளையை சேர்ந்த சுபணன் (35) என்பவரும் சேர்ந்து சிறுவன் லால் மோகனை கொலை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் கள்ளக்காதல் ஜோடியை கைது செய்தனர்.

வாக்குமூலம்

போலீசாரிடம் வசந்தா அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது.-

எனக்கும், சுபணனுக்கும் நீண்ட நாட்களாக கள்ளக்காதல் இருந்தது. இதை அறிந்த கணவன் மோகன் என்னை விட்டு பிரிந்து சென்றார். அதன்பின்பு, நாங்கள் யாருடைய தொந்தரவும் இல்லாமல் சந்தோஷமாக இருந்தோம். கடந்த 2016-ம் ஆண்டு நானும், சுபணனும் வீட்டில் உல்லாசமாக இருந்ததை மகன் லால் மோகன் நேரில் பார்த்து விட்டான். இதுகுறித்து அவன் வெளியே சொன்னால் அவமானமாகி விடும் என அச்சப்பட்டோம். மகன் என்றும் பாராமல் அவனின் வாயில் தூக்க மாத்திரையை திணித்து விழுங்க வைத்தோம். தொடர்ந்து, நாயை கட்டி போடும் சங்கிலியால் நானும், சுபணனும் சேர்ந்து கழுத்தை நெரித்து கொன்றோம். தூக்க மாத்திரையை தின்று தற்கொலை செய்ததாக நாடகமாடினோம்.

மகளுக்கு திருமணம்

எங்களின் மீது சந்தேகம் அடைந்த கணவர் மோகன், மகனின் சாவு தொடர்பாக விசாரணை நடத்த பல இடங்களில் மனு கொடுத்து வந்தார். அவர் எங்களை மாட்டி விடுவாரோ என அச்சப்பட்டோம். எனது மகளை கள்ளக்காதலனுக்கு திருமணம் செய்து வைத்தால், மகளின் வாழ்க்கையை கருதி கணவர் மோகன் மேல் நடவடிக்கையில் இறங்க மாட்டார் என நினைத்தேன். இதனால், எனது மூத்த மகளை சுபணனுக்கு திருமணம் செய்து வைத்தேன்.

ஆனால், போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி எங்களை அடையாளம் கண்டு கொண்டனர்.

இவ்வாறு அவர் கூறியதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து கைது செய்யப்பட்ட வசந்தாவும், சுபணனும் குழித்துறை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு பாளையங்கோட்டை ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

உருகுலைந்த குடும்பம்

வசந்தாவின் கணவர் மோகன் ஆரம்பத்தில் குடும்பத்தை நல்ல முறையில்தான் கவனித்து வந்துள்ளார். வசந்தாவின் நடத்தை சரியில்லாததால் அவர்கள் இடையே பிரிவு ஏற்பட்டது. வசந்தாவின் மூத்த மகளை கள்ளக்காதலன் சுபணன் திருமணம் செய்துள்ள நிலையில், இளைய மகள் வெளியூரில் தங்கியிருந்து நர்சிங் படித்து வருகிறார். தற்போது, வசந்தாவும், சுபணனும் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்ட நிலையில், இரண்டு மகள்களும் ஆதரவின்றி தவிக்கிறார்கள்.

கள்ளக்காதலால் ஒரு குடும்பம் உருகுலைந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story