செங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா வைரஸ் சிறப்பு சிகிச்சை வார்டு தொடக்கம்


செங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா வைரஸ் சிறப்பு சிகிச்சை வார்டு தொடக்கம்
x
தினத்தந்தி 16 March 2020 11:30 PM GMT (Updated: 16 March 2020 9:33 PM GMT)

செங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா வைரஸ் சிறப்பு சிகிச்சை வார்டு தொடங்கப்பட்டது

செங்கோட்டை,

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளான அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா, இத்தாலி, தென்கொரியா, தாய்லாந்து உள்ளிட்ட 60-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. இதனால் பலி எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்த வைரஸ் இந்தியாவிலும் தற்போது வேகமாக பரவி வருவதால் பொது இடங்கள், கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்களுக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம் என மத்திய, மாநில அரசுகள் அறிவுறுத்தியுள்ளது.

தமிழக அரசு மழலையர் பள்ளி மாணவ-மாணவிகள் முதல் 5-ம் வகுப்பு படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு வருகிற 31-ந் தேதி வரை விடுமுறை அளித்துள்ளது. மத்திய சுகாதாரத்துறை நோய் தடுப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தியுள்ளது.

சிறப்பு சிகிச்சை வார்டு

தமிழக அரசு சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் விழிப்புணர்வு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் கூடுதலாக அரசு ஆஸ்பத்திரிகளில் சிறப்பு பிரிவும் அமைக்கப்பட்டுள்ளது. அண்டை மாநிலமான கேரளாவில் பத்தனம் திட்டாவில் 2 பேருக்கு கொரோனா வைரஸ் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் செங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா வைரஸ் சிறப்பு சிகிச்சை வார்டு தனியாக தொடங்கப்பட்டுள்ளது. 3 படுக்கைகள் மற்றும் அனைத்து மருத்துவ வசதிகளுக்கும் தனியாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஆஸ்பத்திரியின் தலைமை மருத்துவ அலுவவர் ராஜே‌‌ஷ் கண்ணன் கூறுகையில், “தமிழக, கேரள மாநிலத்தின் எல்லைப்பகுதியாக செங்கோட்டை இருப்பதால் கேரளாவில் இருந்து இங்கு வருபவர்கள் அதிகம். இதனால் செங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா வைரஸ் காய்ச்சலுக்கு சிறப்பு சிகிச்சை வார்டு அமைக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக இதுவரை யாரும் செங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படவில்லை. குறிப்பாக தென்காசி மாவட்டத்தில் காய்ச்சல் தாக்கம் குறைந்துள்ளது. இருப்பினும், கொரோனா வைரஸ் அறிகுறியில் யாரேனும் வந்தால், அவர்களுக்கு சிகிச்சை அளிக்க தனியாக சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது. அதில், மருந்துகள், நவீன மருத்துவ உபகரணங்கள் வைக்கப்பட்டு, 24 மணி நேரமும் செவிலியர்கள் பணிபுரியும் வகையில், தயார் நிலையில் வைத்துள்ளோம்” என்றார்.

Next Story