கொரோனா வைரஸ் எதிரொலி: தியேட்டர்- விளையாட்டு அரங்கம், சுற்றுலா தலங்கள் மூடப்பட்டன


கொரோனா வைரஸ் எதிரொலி: தியேட்டர்- விளையாட்டு அரங்கம், சுற்றுலா தலங்கள் மூடப்பட்டன
x
தினத்தந்தி 18 March 2020 12:00 AM GMT (Updated: 17 March 2020 6:30 PM GMT)

கொரோனா வைரஸ் எதிரொலி காரணமாக தஞ்சை மாவட்டத்தில் தியேட்டர்- விளையாட்டு அரங்கம், சுற்றுலா தலங்கள் மூடப்பட்டு உள்ளன. மேலும் தஞ்சைக்கு வெளிநாட்டினர் வருகையும் குறைந்தது.

தஞ்சாவூர்,

கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகின்றன. இந்த வைரஸ் தாக்குதல் காரணமாக வெளிநாடுகளில் உயிரிழப்புகள் அதிக அளவில் இருந்தாலும் இந்தியாவில் இதனை கட்டுப்படுத்த மத்திய அரசு, மாநில அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தனி வார்டும் திறக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா வைரஸ் தொடர்பாக புகார் தெரிவிக்க 14 இடங்களில கட்டுப்பாட்டு அறைகளும் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. மேலும், மாவட்டத்தில் உள்ள அனைத்து தியேட்டர்களும் நேற்று முதல் மூடப்பட்டுள்ளன.

சுற்றுலா தலங்கள்

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களான மனோரா, தஞ்சை தொல்காப்பியர் சதுக்கம், மணிமண்டபம், அரண்மனை வளாகத்தில் உள்ள சரஸ்வதி மகால் நூலகம், கலைக்கூடம், தொல்லியல் துறை சார்பில் பராமரிக்கப்பட்டு வரும் மணி கோபுரம், மராட்டா தர்பார் ஹால் ஆகியவை மூடப்பட்டு பார்வையாளர்களுக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.

தஞ்சை மாவட்டத்தில் உள்ள வழிபாட்டு தலங்களான பெரிய கோவில், புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் உள்ளிட்ட பரிகாரத்தலங்களில் பக்தர்கள் குறைந்த அளவிலேயே வர தொடங்கினர். அப்படி வரும் பக்தர்களுக்கு கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வை பொது சுகாதாரத்துறையினர் துண்டு அறிக்கை மூலம் வழங்கி வருகின்றனர்.

பொதுமக்கள் ஏமாற்றம்

பள்ளி, கல்லூரி விடுமுறை என்பதால் நேற்று தஞ்சாவூர் அரண்மனை கலைக்கூடத்தை பார்வையிட இளைஞர்களும், பொதுமக்களும், ஒரு சில வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் வருகைபுரிந்தனர். ஆனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கலைக்கூடம் மூடப்பட்டதால் ஏமாற்றத்தோடு திரும்பினர். தஞ்சை அன்னை சத்யா விளையாட்டு அரங்கமும் முதல் மூடப்பட்டது இதுகுறித்து தஞ்சை கலைக்கூட காப்பாட்சியர் சிவக்குமார் கூறியதாவது:-

தஞ்சை மாவட்டத்தில் உள்ள முக்கியமான சுற்றுலா தலங்களில் கலைக்கூடமும் ஒன்று, இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் வந்து கலைக்கூடத்தில் உள்ள அரிய கற்சிலைகளை பார்வையிட்டும், ஆயுதகோபுரத்தில் ஏறி தஞ்சையின் அழகையும் பார்த்து ரசிப்பர்.

வெளிநாட்டினர் வருகை குறைந்தது

கடந்த 14-ம் தேதி 79 வெளிநாட்டு பயணிகள் உள்பட 4,743 பேரும், 15-ம் தேதி 57 வெளிநாட்டு பயணிகள் உள்பட 3,075 பேரும், 16-ம் தேதி 15 வெளிநாட்டு பயணிகள் உள்பட 450 பேரும் வருகை புரிந்துள்ளனர். வைரஸ் தொற்று நோய் பரவுவதை தடுக்கும் வகையில் மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவுப்படி மார்ச் 31-ம் தேதி வரை மூடப்படுகிறது. ஆனால் பணியாளர்கள் வழக்கம் போல் பணியில் ஈடுபட்டு வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

கல்லணை வெறிச்சோடியது

சுற்றுலா பயணிகள் அதிகமாக கூடும் கல்லணை ‘கொரோனா’ அச்சுறுத்தல் காரணமாக நேற்று வெறிச்சோடி காணப்பட்டது. கல்லணையில் உள்ள கரிகாலன் பூங்கா, காவிரி விளக்க கூடம், சிறுவர் விளையாட்டு கூடம், கரிகாலன் மணிமண்டபம் ஆகியவை பூட்டப்பட்டிருந்தது.


Next Story