கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை : கோவையில் தியேட்டர்கள், பூங்காக்கள் மூடப்பட்டன


கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை : கோவையில் தியேட்டர்கள், பூங்காக்கள் மூடப்பட்டன
x
தினத்தந்தி 18 March 2020 12:00 AM GMT (Updated: 17 March 2020 8:34 PM GMT)

கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கையாக கோவையில் தியேட்டர்கள், பூங்காக்கள் மூடப்பட்டன. பொதுமக்கள் நடமாட்டம் குறைந்ததால் ரெயில், பஸ் நிலையங்கள் வெறிச்சோடின.

கோவை,

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக கர்நாடகா மற்றும் கேரள எல்லையில் உள்ள சோதனைச்சாவடிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

அதுபோன்று கோவையில் உள்ள விமான நிலையம், தமிழக- கேரள எல்லையிலும் டாக்டர்கள் முகாமிட்டு வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்க ளில் இருந்து வருபவர்களை கண்காணித்து வருகிறார்கள். இதையொட்டி பூங்காக்கள், வணிக வளாகங்கள், தியேட்டர்கள், சுற்றுலா மையங்களை மூடவும் உத்தரவிடப்பட்டது.

பூங்காக்கள் மூடப்பட்டன

இதனால் கோவையில் உள்ள வ.உ.சி. உயிரியல் பூங்கா உள்பட பூங்காக்கள், மாநகரில் உள்ள 40 தியேட்டர்கள், 3 வணிக வளாகங்கள், நேரு விளையாட்டு மைதானம் ஆகியவை மூடப்பட்டன. அதன் நுழைவு வாயில் கதவில் அறிவிப்பு நோட்டீஸ் ஒட்டப்பட்டு உள்ளது.

அது போன்று சுற்றுலா மையங்களான கோவை குற்றால அருவி, பரளிக்காடு, கல்லாறு தோட்டக்கலைப்பண்ணை, வனத்துறை அலுவலக வளாகத்தில் உள்ள வன அருங்காட்சியகம், வ.உ.சி. உயிரியியல் பூங்கா எதிரே உள்ள அரசு அருங்காட்சியகம், வேளாண் பல்கலைக்கழகத்தில் உள்ள பூச்சிகள் அருங்காட்சியகம் ஆகியவை மூடப்பட்டன. கோவை காந்தி பார்க், அங்குள்ள நீச்சல்குளம் மூடப்பட்டது.

கிருமி நாசினி தெளிப்பு

பக்தர்கள் அதிகமாக கூடும் மருதமலை முருகன் கோவில், கோனியம்மன் கோவில், தண்டு மாரியம்மன், பேரூர் பட்டீசுவரர் கோவில் உள்பட முக்கிய கோவில்களிலும் நேற்று பக்தர்கள் கூட்டம் குறைவாகதான் இருந்தது. கோவில்களில் உள்ள கைப்பிடி சுவர்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. இரும்பு கைப்பிடிகள் கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்யப்பட்டது.

பேரூர் பேரூராட்சி சார்பில் கொரோனா வைரஸ் தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அப்போது கைகழுவுவது குறித்து விளக்கப்பட்டது.

மருதமலை அடிவாரத்தில் இருந்து மலைப்பாதையில் செல்லும் வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை செய்யும் ஊழியர்கள் மட்டுமே வெளியே சென்றனர். பொதுமக்கள் பலர் வீட்டிற்குள்ளேயே முடங்கினர். இதனால் ரெயில் மற்றும் பஸ் நிலையங்களில் பொதுமக்கள் கூட்டம் மிகவும் குறைவாக இருந்தது.

ரெயில், பஸ்நிலையங்கள் வெறிச்சோடின

இதனால் வடகோவை, போத்தனூர் உள்ளிட்ட ரெயில் நிலையங்கள் மற்றும் பஸ்நிலையங்கள் பயணிகள் கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. கோவை ரெயில் நிலையத்தில் வழக்கத்தை விட குறைவான பயணிகளே இருந்தனர். கோவை வழியாக கேரளா செல்லும் ரெயில்களிலும் பயணிகள் கூட்டம் மிக குறைவாக இருந்தது. இதனால் ஏராளமான இருக்கைகள் காலியாக இருந்தன.

குறிப்பாக முன்பதிவு இல்லாமல் பயணம் செய்யக்கூடிய ரெயில் பெட்டிகளில் 10-க்கும் குறைவான பயணிகளே இருந்தனர். அதுபோன்று கோவையில் இருந்து பிற ஊர்களுக்கு செல்லும் பஸ்களிலும் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது.


Next Story