கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் எதிரொலி: நீலகிரியில் அனைத்து சுற்றுலா தலங்களும் மூடப்பட்டன


கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் எதிரொலி: நீலகிரியில் அனைத்து சுற்றுலா தலங்களும் மூடப்பட்டன
x
தினத்தந்தி 18 March 2020 12:00 AM GMT (Updated: 17 March 2020 8:46 PM GMT)

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நீலகிரியில் அனைத்து சுற்றுலா தலங்களும் மூடப்பட்டன. சுற்றுலா பயணிகள் வர வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.

ஊட்டி,

சீனாவின் உகான் நகரில் தொடங்கி உலகின் பல நாடுகளில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி மக்களை அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவில் 100-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இந்த பாதிப்பை தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவித்து உள்ளது. சுற்றுலா மாவட்டமான நீலகிரியில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வு கூட்டம் ஊட்டியில் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை தாங்கி பேசினார். இதில் மாவட்ட அளவிலான அதிகாரிகள் கலந்துகொண்டனர். அதன்பின்னர் கலெக்டர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சுற்றுலா தலங்கள் மூடப்பட்டன

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின்படி, நீலகிரி மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம், குன்னூர் சிம்ஸ் பூங்கா, காட்டேரி பூங்கா, கோத்தகிரி நேரு பூங்கா, தொட்டபெட்டா மலைசிகரம், பைக்காரா படகு இல்லம் உள்பட அனைத்து சுற்றுலா தலங்களும் இன்று (அதாவது நேற்று) முதல் வருகிற 31-ந் தேதி வரை மூடப்படுகிறது. கேரளாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளதால், வெளிமாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் நீலகிரிக்கு வருவதை கட்டுப்படுத்தவும், சோதனைச்சாவடிகளில் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

மலை ரெயில் நிறுத்தம்

கிருமிநாசினியை மக்களே தயார்படுத்த 320 கிராம் பிளீச்சிங் பவுடருடன் ஒரு லிட்டர் தண்ணீரை சேர்த்தால், மேல் பகுதியில் நுரை கலந்த தண்ணீர் காணப்படும். அதை 9 லிட்டர் தண்ணீருடன் சேர்த்து வீடுகள், சுற்றுப்புறங்களில் தெளிக்கலாம். கிருமிநாசினி கிடைக்காத பட்சத்தில், அதற்கு பதிலாக அறுவை சிகிச்சைக்காக பயன்படுத்தப்படும் ஸ்பிரிட்-ஐ கிருமி நாசினியாக நேரிடையாக பயன்படுத்தலாம். அல்லது சோப்பை பயன்படுத்தி 20 முதல் 30 வினாடிகள் கைகளை சுத்தமாக கழுவலாம்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊட்டி மலை ரெயில் தற்காலிகமாக 31-ந் தேதி வரை நிறுத்தி வைக்கப்படுகிறது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து மார்க்கெட்டுகளில் உள்ள கடை உரிமையாளர்கள் தங்களது கடையினை சுற்றி, கிருமி நாசினியை கொண்டு, நாளொன்றுக்கு 5 முறை சுத்தம் செய்ய வேண்டும். கடையின் முன்பாக கைகளை கழுவுவதற்கு சோப்பு தண்ணீர் வைக்கப்பட வேண்டும்.

40 குழுக்கள் அமைப்பு

நீலகிரியில் அனைத்து சுற்றுலா தலங்கள் மற்றும் தங்கும் விடுதிகள் மூடப்பட்டு உள்ளதால், சுற்றுலா பயணிகள் நீலகிரிக்கு வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது. தங்கும் விடுதிகளில் உள்ள சுற்றுலா பயணிகள் உடனடியாக காலி செய்ய நோட்டீஸ் வழங்கப்பட்டு உள்ளது. வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் தங்கி இருந்தால், அவர்கள் காலி செய்ய வேண்டும் என்று கூறி சம்பந்தப்பட்ட வெளிநாட்டு தூதரகத்துக்கு தெரிவிக்கும்படி கூற வேண்டும். இந்த உத்தரவை மீறும் தங்கும் விடுதிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு சீல் வைக்கப்படும்.

நீலகிரியில் செயல்படும் சர்வதேச பள்ளிகளில் வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் படிப்பதால், பள்ளிகளை மாவட்ட மருத்துவ அதிகாரிகள் நேரடியாக கண்காணிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. நிகழ்ச்சிகள் நடைபெறும் திருமண மண்டபத்துக்கு 100-க்கும் குறைவானவர்களை மட்டுமே அழைக்க வேண்டும். கிராமங்களில் சுகாதாரத்தை பாதுகாக்க 40 குழுக்கள் அமைக்கப்பட்டு, அனைத்து பகுதிகளிலும் தூய்மை பணி கண்காணிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

வெறிச்சோடிய சுற்றுலா தலங்கள்

நேற்று காலையில் வழக்கம்போல் சுற்றுலா தலங்கள் திறக்கப்பட்டு இருந்தது. பின்னர் மதியம் 1 மணியளவில் அனைத்து சுற்றுலா தலங்களையும் மூட வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டதை அடுத்து, உடனடியாக மூட நடவடிக்கை எடுக்கப்பட்டது. டிக்கெட் கொடுப்பது நிறுத்தப்பட்டு சுற்றுலா பயணிகள் வெளியேற்றப்பட்டனர். இதனால் சுற்றுலா பயணிகள் திரும்பி சென்றனர். சுற்றுலா தலங்கள் வெறிச்சோடின.


Next Story