கொரோனா வைரஸ் எதிரொலி: மதுரை மத்திய சிறையில் கைதிகளை சந்திக்க பார்வையாளர்களுக்கு தடை


கொரோனா வைரஸ் எதிரொலி: மதுரை மத்திய சிறையில் கைதிகளை சந்திக்க பார்வையாளர்களுக்கு தடை
x
தினத்தந்தி 17 March 2020 10:30 PM GMT (Updated: 17 March 2020 9:38 PM GMT)

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக மதுரை மத்திய சிறையில் கைதிகளை சந்திக்க பார்வையாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மதுரை,

கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் நாடு முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் கூடும் இடங்களான தியேட்டர்கள், கேளிக்கை விடுதிகள், மதுக்கடை பார்கள் போன்றவற்றை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சிறைகளில் உள்ள கைதிகளை உறவினர்கள், வக்கீல்கள் சந்திக்க நேற்று முதல் தடை விதித்து அரசு உத்தரவிட்டது. மதுரை மத்திய சிறையில் விசாரணை, தண்டனை கைதிகள் 1700-க்கும் மேற்பட்டோர் உள்ளனர். அவர்களை சந்திக்க உறவினர்கள், வக்கீல்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு நேற்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.

விழிப்புணர்வு

இது தவிர, சிறையின் உள்ளேயும் கொரோனா தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதற்காக சிறையில் உள்ள கைதிகள் அறை மற்றும் சிறைக்கு உள்ளே மற்றும் வெளியே உள்ள பகுதிகளில் சுத்தம் செய்து கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. டாக்டர்கள் கொரோனா வைரஸ் குறித்து கைதிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

மேலும் சிறையில் இருந்து கோர்ட்டுக்கு அழைத்துச் செல்லப்படும் கைதிகளும் உள்ளே வரும் போது கை, கால்களை சுத்தம் செய்த பின்னர் தான் அனுமதிக்கப்பட்டனர். கைதிகள் பயன்பாட்டிற்காக சிறை வளாகத்தில் தனியாக தண்ணீர் குழாய், சோப்பு போன்றவற்றை நிர்வாகம் வைத்துள்ளது.

இதனை மதுரை சரக சிறைத்துறை டி.ஐ.ஜி. பழனி, கண்காணிப்பாளர்கள் ஊர்மிளா மற்றும் அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

Next Story