துறையூர், உப்பிலியபுரம், திருப்பைஞ்சீலி கொரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணர்வு


துறையூர், உப்பிலியபுரம், திருப்பைஞ்சீலி கொரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணர்வு
x
தினத்தந்தி 18 March 2020 11:00 PM GMT (Updated: 18 March 2020 5:42 PM GMT)

துறையூர், உப்பிலியபுரம், திருப்பைஞ்சீலி பகுதிகளில் கொரோனா வைரஸ் தடுப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

சமயபுரம்,

கொரோனா வைரஸ் தடுப்பு குறித்து போலீசாருக்கான விழிப்புணர்வு முகாம் துறையூர் போலீஸ் நிலையத்தில் நடந்தது. போலீஸ் இன்ஸ்பெக்டர் குருநாதன் தலைமை தாங்கினார். பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு போலீசார் சென்று வருவதால், கொரோனா வைரஸ் தொற்று ஏற்படாமல் இருக்க எப்படி தங்களை தற்காத்துக்கொள்ள வேண்டும் என்று அரசு ஆஸ்பத்திரி தலைமை மருத்துவர் வேல்முருகன் விளக்கம் அளித்தார். கூட்டத்தில் சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜா, செல்வராஜ், தண்டபாணி மற்றும் போலீசார் பலர் கலந்து கொண்டனர்.

துறையூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஒன்றிய தலைவர் சரண்யா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரேவதி, குணசேகரன் மற்றும் அலுவலக பணியாளர்கள் தங்களது கைகளை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்து அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

உப்பிலியபுரம்

இதுபோல் உப்பிலியபுரத்தை அடுத்துள்ள வெங்கடாசலபுரத்தில் நடந்த விழிப்புணர்வு பிரசாரத்துக்கு ஊராட்சி தலைவர் லதா தலைமை தாங்கினார். வெங்கடாசலபுரம் மானிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார். ஆரம்பசுகாதார நிலைய ஆய்வாளர் பழனிச்சாமி கொரோனா வைரஸ் குறித்தும், அதை தடுக்கும் வழிமுறைகள் குறித்தும் விளக்கம் அளித்தார். முடிவில் வைரஸ் தடுப்பு முறைகளை பற்றி உறுதிமொழி எடுக்கப்பட்டது. இதில், ஊராட்சி உறுப்பினர்கள், பள்ளி ஆசிரியர்கள், பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர். முடிவில் ஊராட்சி செயலாளர் சந்திரசேகர் நன்றி கூறினார்.

திருப்பைஞ்சீலி

மேலும் திருப்பைஞ்சீலியில் நீலிவனநாதர் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திருப்பைஞ்சீலி ஊராட்சி சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்துக்கு ஊராட்சி தலைவர் தியாகராஜன் தலைமை தாங்கினார். துணை தலைவர் பாலகிருஷ்ணன், மண்ணச்சநல்லூர் வட்டார மருத்துவ அலுவலர் மதிவாணன், ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். ஊர்வலம் சிவன் கோவிலிலிருந்து புறப்பட்டு, வடக்குத்தெரு, வனத்தாயி அம்மன் கோவில் தெரு, தெற்குத்தெரு, கடை வீதி வழியாக சென்றது. முன்னதாக கைகளை சுத்தமாக வைத்துக்கொள்வதன் அவசியம் குறித்தும், சுகாதாரமான முறையில் உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்றும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

Next Story