கொரோனா வைரஸ், பறவை காய்ச்சல் பீதி: வரலாறு காணாத வகையில் முட்டை விலை அதிரடி சரிவு 195 காசுகளாக நிர்ணயம்


கொரோனா வைரஸ், பறவை காய்ச்சல் பீதி: வரலாறு காணாத வகையில் முட்டை விலை அதிரடி சரிவு 195 காசுகளாக நிர்ணயம்
x
தினத்தந்தி 19 March 2020 12:00 AM GMT (Updated: 18 March 2020 6:36 PM GMT)

நாமக்கல் மண்டலத்தில் கொரோனா வைரஸ் தொடர்பான வதந்தி மற்றும் பறவைகாய்ச்சல் பீதி காரணமாக வரலாறு காணாத வகையில் முட்டை விலை நேற்று ஒரே நாளில் 70 காசுகள் சரிவடைந்து 195 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

நாமக்கல்,

நாமக்கல் மண்டலத்தில் 1,100-க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இவற்றின் மூலம் நாள் ஒன்றுக்கு ஏறத்தாழ 3½ கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. கடந்த மாதம் ஒரு முட்டை 450 காசுகள் வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் தொடர்பான வதந்தியால் அதன் விலை சரிவடைந்து வருகிறது. தற்போது கேரளா மற்றும் கர்நாடகாவில் பறவை காய்ச்சல் நோய் கோழிகளை தாக்கி இருப்பதால் கோழி மற்றும் முட்டை விற்பனை மேலும் சரிவை சந்தித்து உள்ளன.

குறி்ப்பாக நாமக்கல் மண்டலத்தில் இருந்து தினசரி கேரளாவுக்கு அனுப்பப்படும் 1 கோடி முட்டையில் தற்போது சுமார் 80 லட்சம் முட்டைகள் அனுப்பப்படாமல் தேக்கம் அடைந்து வருகிறது.

70 காசுகள் குறைப்பு

இதற்கிடையே நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 265 காசுகளாக இருந்து வந்தது. நேற்று நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முட்டையின் கொள்முதல் விலையை அதிரடியாக 70 காசுகள் குறைக்க முடிவு செய்தனர். எனவே முட்டை கொள்முதல் விலை 195 காசுகளாக சரிவடைந்து உள்ளது.

பிற மண்டலங்களில் முட்டை விலை (காசுகளில்) வருமாறு:-

சென்னை-230, ஐதராபாத்-210, விஜயவாடா-290, மைசூரூ-295, மும்பை-305, பெங்களூரு-290, கொல்கத்தா-304, டெல்லி-245.

கறிக்கோழி கிலோ ரூ.46-க்கும், முட்டைக்கோழி கிலோ ரூ.40-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அவற்றின் விலைகளில் மாற்றம் செய்யப்படவில்லை.

வரலாறு காணாத சரிவு

முட்டை கொள்முதல் விலை வரலாறு காணாத சரிவை சந்தித்து வருவதால் பண்ணையாளர்கள் கவலை அடைந்து உள்ளனர்.

இது குறித்து தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் நாமக்கல் மண்டல தலைவர் டாக்டர் செல்வராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இந்த விலை வருகிற 24-ந் தேதி வரை நீடிக்கும். 25-ந் தேதி அடுத்த விலை நிர்ணயம் செய்யப்படும். இதற்கு கீழ் முட்டை கொள்முதல் விலை குறையாது. எனவே தேசிய முட்டை ஒருங்கிணைப்புகுழு நிர்ணயம் செய்துள்ள விலையை காட்டிலும் பண்ணையாளர்கள் குறைத்து முட்டைகளை விற்க வேண்டாம்.

இவ்வாறு அதில் அவர் கூறி உள்ளார்.

உற்பத்தியை குறைக்க முயற்சி

இந்த விலை சரிவு குறித்து தமிழ்நாடு முட்டைக்கோழி பண்ணையாளர்கள் மார்க்கெட்டிங் சொசைட்டி தலைவர் வாங்கிலி சுப்பிரமணியம் கூறியதாவது:-

கொரோனா வைரஸ் தொடர்பான வதந்தி மற்றும் பறவை காய்ச்சல் பீதியால் நாமக்கல் மண்டலத்தில் ஏறத்தாழ 15 கோடி முட்டைகள் தேக்கம் அடைந்து உள்ளன. இதன் காரணமாக கோழிப்பண்ணையாளர்களுக்கு முட்டை மற்றும் கோழி விற்பனை தொடர்பாக இதுவரை ரூ.500 கோடிக்கு மேல் ந‌‌ஷ்டம் ஏற்பட்டு உள்ளது.

தற்போது உள்ள சூழ்நிலையில் ஒரு முட்டையின் உற்பத்தி செலவு 4 ரூபாயாக உள்ளது. ஆனால் பண்ணையாளர்களுக்கு ஒரு முட்டைக்கு ஒரு ரூபாய் மட்டுமே கிடைக்கிறது. இதனால் ஒரு முட்டைக்கு ரூ.3 வரை ந‌‌ஷ்டம் ஏற்பட்டு வருகிறது. எனவே கோழிகளுக்கு தீவனம் போட முடியாமல் பண்ணையாளர்கள் தவித்து வருகின்றனர். மத்திய, மாநில அரசுகள் கோழிப்பண்ணை தொழிலை காப்பாற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதனால் சில பண்ணையாளர்கள் வயதான கோழிகளுக்கு தீவனம் போடுவதை நிறுத்தி முட்டை உற்பத்தியை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ரூ.1 கோடி பரிசு

இதற்கிடையே, கோழி அல்லது முட்டை சாப்பிட்டு கொரோனா வைரஸ் தாக்கியதாக நிரூபிக்கப்பட்டால் ரூ.1 கோடி பரிசு வழங்கப்படும், எனவும் கோழிப்பண்ணையாளர்கள் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story