கொரோனா வைரஸ் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு


கொரோனா வைரஸ் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு
x
தினத்தந்தி 23 March 2020 10:45 PM GMT (Updated: 23 March 2020 7:52 PM GMT)

கொரோனா வைரஸ் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ஆவூர்,

விராலிமலை தாலுகா நீர் பழனி சரக வருவாய் கிராம பகுதிகளில், புதுக்கோட்டை மாவட்ட டாஸ்மாக் உதவி மேலாளர் கபரியேல் சார்லஸ் தலைமையில், கிராம நிர்வாக அலுவலர்கள் செந்தில்குமார், ராஜாமுகமது, நீர்பழனி அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஆய்வாளர் முகமதுயூசுப் மற்றும் வருவாய்த்துறை பணி யாளர்கள் ஆகியோர் ஒன்றிணைந்து நீர்பழனி, ஆவூர், ஆம்பூர்பட்டிநால்ரோடு, வெம்மணி, ஆலங்குடி, மலம்பட்டி, பேராம்பூர், மதயாணைப்பட்டி ஆகிய கிராமங்களுக்கு உட்பட்ட அனைத்து குக்கிராமங்களிலும் நேற்று கொரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணர்வு பணிகளை மேற்கொண்டனர்.

அப்போது கடைகள், வீடுகள் மற்றும் பொது இடங்களில் உள்ள பொதுமக்கள், பள்ளி மாணவர்களிடையே கொரோனா வைரஸ் பரவும் விதம் பற்றியும், அதை தடுப்பது பற்றிய விழிப்புணர்வு கருத்துக்களை எடுத்துக்கூறினர். மேலும் கைகளை தினமும் அடிக்கடி சோப்பு மற்றும் சானிடைசர் திரவம் கொண்டு கழுவ வேண்டும் என்ற செய்முறை விளக்கம் செய்து காண்பித்தனர். இதேபோல வேலூர் ஊராட்சி பகுதியில் உள்ள கிராமங்களில் ஊராட்சி மன்ற தலைவர் ராதாசுப்பிரமணியன் தலைமையிலும், லட்சுமணம்பட்டி ஊராட்சி பகுதிகளில் ஊராட்சி தலைவர் ஜோதிபச்சமுத்து தலைமையிலும், மேலபச்சகுடி ஊராட்சியில் ஊராட்சி தலைவர் செல்விசுப்ரமணி தலைமையிலும், கொரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணர்வு பணிகளை மேற்கொண்டனர்.

விழிப்புணர்வு ஏற்படுத்திய வாலிபர்கள்

புதுக்கோட்டை நகர் பகுதியில் உள்ள கொட்டகைகாரத் தெரு, மச்சுவாடி, வண்டிப்பேட்டை, பிருந்தாவனம் உள்ளிட்ட பகுதிகளில் அ.தி.மு.க.வின் தொழில்நுட்ப பிரிவினர் மற்றும் அப்பகுதி வாலிபர்கள் ஒன்றிணைந்து வீடு வீடாக சென்று துண்டு பிரசுரங்கள் வழங்கினார்கள். மேலும் வீடுகளில் உள்ளவர்களிடம் கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, கிருமிநாசினி மற்றும் கை கழுவும் திரவம் கொண்டு கை கழுவ வேண்டியதன் அவசியம் குறித்து எடுத்துக்கூறி, கைகழுவ செய்தனர். தொடர்ந்து அவர்கள் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினார்கள்.

பொன்னமராவதி

பொன்னமராவதி அருகே வேகுப்பட்டியில் வீடு வீடாக சென்று நிலவேம்பு கசாயம் மற்றும் கொரோனா விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு ஊராட்சி மன்ற தலைவர் அர்ஜுனன் தலைமை தாங்கி நிலவேம்பு கசாயத்தை பொதுமக்களுக்கு வழங்கினார். இதில் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் முத்து, ஊராட்சி செயலாளர் சங்கர், வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து வீடு வீடாக சென்று நிலவேம்பு கசாயம் மற்றும் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினர். இதேபோல் பொன்னமராவதி பேரூராட்சி சார்பில், பேரூராட்சியில் உள்ள பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வீடு வீடாக சென்று வினியோகம் செய்யப்பட்டது. 

Next Story